நல்லா யோசிச்சு பாருங்க, வேகம் குறைந்த இந்தியாவின் பிரச்சனைக்கு காரணமே ஐபிஎல் தான் – உண்மையை விளக்கும் வாசிம் அக்ரம்

Wasim-Akram
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் டி20 அணியாக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இத்தொடரில் சூப்பர் 12 சுற்றில் தேவையான வெற்றிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா அழுத்தமான நாக் அவுட் போட்டியில் வழக்கம் போல சொதப்பி படுதோல்வியை சந்தித்து வெளியேறியது. இத்தனைக்கும் டி20 உலக கோப்பையை மிஞ்சும் அளவுக்கு அதிகப்படியான அழுத்தம் கொண்ட ஐபிஎல் தொடரில் விளையாடிய அதிகப்படியான அனுபவத்தை அனைத்து இந்திய வீரர்களும் ஏற்கனவே கொண்டுள்ளார்கள்.

ENg vs IND Jos Buttler Alex hales

- Advertisement -

இருப்பினும் அவர்களால் கடந்த 2013க்குப்பின் நடைபெற்ற ஐசிசி தொடர்களில் நாக் அவுட் சுற்றில் நிலவும் அழுத்தத்தை ஒருமுறை கூட சமாளித்து கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் அதே ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் தான் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை சாய்க்க உதவியதாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் வெளிப்படையாக பேசினார். அப்படி வெளிநாடுகளுக்கு உதவி செய்யும் ஐபிஎல் தொடர் இந்தியாவுக்கு பாதகமாக இருப்பதால் நிறைய இந்திய ரசிகர்கள் அதை தடை செய்யுமாறு கோரிக்கை வைக்கிறார்கள். ஏனெனில் ஐபிஎல் தொடரில் பணம் சம்பாதிக்கும் இந்திய வீரர்கள் நாட்டுக்காக விளையாடும் போது முழுமூச்சுடன் போராடுவதில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

நல்லா யோசிங்க:

இந்நிலையில் தரமான அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் நோக்கத்தில் 2008இல் ஐபிஎல் தொடர் உருவாக்கப்பட்ட பின் இந்தியா இதுவரை ஒரு டி20 உலக கோப்பையை கூட வெல்லவில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 தொடர்களில் பிசிசிஐ அனுமதிக்காததே அதற்கு காரணமென்று தெரிவிக்கும் அவர் ஐபிஎல் தொடரில் அதிகப்படியான பணத்தை சம்பாதித்து விடுவதால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் வேகம் குறைந்து விட்டதாகவும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“இந்தியா ஐபிஎல் தொடரால் பயனடையும் என்று அனைவரும் நினைத்தார்கள். இந்தியா 2007இல் டி20 உலக கோப்பையை வென்றது. ஆனால் ஐபிஎல் தொடங்கப்பட்ட பின் அவர்கள் இன்னும் டி20 உலக கோப்பையை வெல்லவில்லை. 2011இல் அதுவும் சொந்த மண்ணில் 50 ஓவர் கோப்பையை வென்றார்கள். எனவே இந்த இடத்தில் கேள்வி எழுகிறது. இதனால் வெளிநாட்டு தொடர்களில் தங்களது வீரர்களை அனுமதிக்கும் வகையில் இந்தியா தனது அணுகுமுறையை மாற்றுமா? மேலும் ஆசிய கோப்பையிலேயே இந்திய பவுலர்களிடம் ஒரு மாற்றத்தை கண்டேன்”

- Advertisement -

“அதாவது ஐபிஎல் தொடருக்கு பின் அவர்களது வேகம் குறைந்து விட்டது. எடுத்துக்காட்டாக முதல் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 145 கி.மீ வேகத்தில் வீசிய ஆவேஷ் கானுடைய வேகம் இப்போது 130 – 135 என குறைந்து விட்டது. எனவே அவர் ஐபிஎல் தொடரில் 12 – 13 கோடி ரூபாய்களை சம்பாதித்து விட்டதால் இந்த வேகம் குறைந்து விட்டதா என்பதை பிசிசிஐ ஆராய வேண்டும். மேலும் ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களுக்கான சம்பளத்தை குறைத்துக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பசியுடன் சிறப்பாக செயல்படுவார்கள். ஏனெனில் பாகிஸ்தானில் ஒரு மாதத்தில் நான் 24 கோடிகளை சம்பாதித்தால் எனது வேலை முடிந்து விட்டதாக நினைத்து நாட்டுக்காக முழு மூச்சுடன் விளையாட மாட்டேன்” என்று கூறினார்.

Waqar-Younis

அதே நிகழ்ச்சியில் இந்திய பவுலர்களின் வேகம் குறைந்ததற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்று மற்றொரு வீரர் வக்கார் யூனிஸ் பேசியது பின்வருமாறு. “அவர்கள் ஏன் வேகத்தை குறைத்துக் கொண்டார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. நான் விளையாடிய போதும் பயிற்சியாளராக செயல்படும் போதும் வேகத்தை கைவிடக்கூடாது என்றே அனைவரிடமும் சொல்வேன். நானும் வாசிம் அக்ரமும் எங்களது கேரியரில் அப்படித் தான் விளையாடினோம். ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஸ்விங் செய்வதற்காக நீங்கள் வேகத்தை குறைத்தால் உங்களது பயிற்சியில் ஏதோ தவறு உள்ளது. அந்த வகையில் இந்திய அணியில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை ஆனால் வேகம் முக்கியம்” என்று கூறினார்.

Advertisement