ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று துவங்க இருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது. இந்திய நேரப்படி ஜூன் 18ஆம் தேதி அதாவது நேற்று மதியம் (3.30pm) மூன்று முப்பது மணிக்கு துவங்க வேண்டிய இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் டாஸ் போடப்படாமல் போட்டி தாமதமானது. மழை நின்ற பிறகு நிச்சயம் டாஸ் போடப்பட்டு ஆட்டம் நடக்கும் என அம்பயர்கள் அறிவித்திருந்தனர்.
அதனால் முதல் சில மணி நேரத்தில் மழை நிற்கும் என அவர்கள் காத்திருந்தனர். ஆனாலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் முதல் நாள் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் முடிவுக்கு வந்தது. மேலும் மழையின் தாக்கம் அடுத்த இரண்டு நாட்களுக்கும் இருக்கும் என்பதனால் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியை எப்படியாவது நடத்தியாக வேண்டும் என ஐசிசி திட்டமிட்டுள்ளது.
அதன்படி மீதமுள்ள இந்த நான்கு நாட்களுக்கு அதிகமான ஓவர்கள் வீசப்படும் என்றும் போட்டி முன்கூட்டியே ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி போட்டியின் ரிசல்ட்டுக்காக ரிசர்வ் டேவான ஆறாவது நாள் அதாவது 23ஆம் தேதியும் போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த 2ஆம் நாள் ஆட்டத்தில் கூடுதலாக சில ஓவர்களை வீச முடிவு செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Day 1 has been called at the Hampshire Bowl. A brief period without rain after lunch but it's back now and the Match Officials have called things. 98 overs now scheduled for tomorrow with a 10-30am local start. #WTC21 pic.twitter.com/XRzie08aAP
— BLACKCAPS (@BLACKCAPS) June 18, 2021
அதன்படி முதல் நாள் ஆட்டம் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் 2-வது நாள் ஆட்டம் வழக்கத்தை விட முன்கூட்டியே துவங்கும். அதாவது இந்திய நேரப்படி 3.30 மணிக்கு துவங்க வேண்டிய இந்த போட்டி இன்று (2.30)இரண்டு முப்பது மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளொன்றுக்கு 90 ஓவர்கள் வீசப்படாமல் 98 ஓவர்கள் வரை வீசப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் முழுவதும் மழை பெய்து ஓய்ந்து உள்ளதால் தற்போது இரண்டாவது நாளில் வானிலை சற்று தெளிவடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
மதிய நேரங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை நிலையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியை ஒரே ஒரு போட்டியாக வைப்பது தவறு என்று பல்வேறு நிபுணர்கள், பிரபலங்களும் கருத்து கூறி வரும் நிலையில் தற்போது இந்தப் போட்டியும் நடக்காமல் போகும் பட்சத்தில் இரண்டு அணிகளுமே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது.