இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் அக்டோபர் 10ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 518/5 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கேப்டன் சுப்மன் கில் 129*, சாய் சுதர்சன் 87 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை 248 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 270 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதிகபட்சமாக அலிக் அதனாஸ் 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3, குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக மீண்டும் பேட்டிங் செய்யுமாறு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்தியா ஃபாலோ ஆன் கொடுத்தது.
திணறிய இந்தியா:
அதை அடுத்து மீண்டும் ஆட்டத்தைத் துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சந்தர்பால் 10, அலிக் அதனாஸ் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் மூன்றாவது விக்கெட்டுக்கு 177 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜான் கேம்பல் சதத்தை அடித்து 115 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாட சாய் ஹோப் இந்தியாவை பந்தாடி சதத்தை அடித்து 103 ரன்கள் குவித்தார்.
மிடில் ஆர்டரில் இம்லச் 12 ரன்களில் அவுட்டானாலும் கேப்டன் ரோஸ்டன் சேஸ் பொறுப்புடன் விளையாடி 40 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த காரி பியர்ரே 0, ஜோமேல் வேரிக்கன் 3, ஆண்டர்சன் பிலிப் 2 ரன்களில் அவுட்டானதால் வெஸ்ட் இண்டீஸ் 350 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது மறுபுறம் ஜஸ்டின் கிரீவ்ஸ் நங்கூரமாக விளையாடி சவாலைக் கொடுத்தார்.
5வது நாள் சென்ற போட்டி:
அவருடன் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்டேன் சீல்ஸ் இந்தியாவை கடுப்பேற்றும் வகையில் பேட்டிங் செய்தார். கடைசி விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் க்ரீவ்ஸ் அரை சதமடித்து 50* ரன்கள் எடுத்தார். அவருடன் சேர்ந்து இந்தியாவை திணறடித்த சீல்ஸ் ஒரு வழியாக 32 ரன்கள் குவித்து அவுட்டானார். அதனால் வெஸ்ட் இண்டீஸை 390 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 2, ஜஸ்ப்ரித் பும்ரா 3, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையும் படிங்க: சஞ்சு சாம்சன் மட்டுமல்ல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறும் மற்றொரு பிரபலம் – விவரம் இதோ
இறுதியில் 121 ரன்களை துரத்தும் இந்தியா 4வது நாள் முடிவில் 63/1 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 58 ரன்கள் மட்டுமே தேவைப்படும் இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 8 ரன்களில் அவுட்டான நிலையில் களத்தில் ராகுல் 25*, சுதர்சன் 30* ரன்களுடன் உள்ளனர். மொத்தத்தில் மொத்தத்தில் ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா இப்போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை கோட்டை விட்டது. மேலும் சீல்ஸ் அமைத்த 79 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை முன்னதாகவே உடைக்க முடியாமல் திணறிய இந்தியா கடைசி நாளில் வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



