IND vs NZ : 2வது போட்டியாவது நடைபெற வருண பகவான் வழி விடுவாரா? பே ஓவல் மைதானத்தின் முழுமையான வெதர் ரிப்போர்ட் இதோ

Rain
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானித்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் சொதப்பலான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஏமாற்றத்துடன் வெளியேறியது. அத்தொடரில் விராட் கோலி போன்ற ஒரு சிலரை தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான மூத்த வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்வியை கொடுத்தது. அதனால் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் இந்த உலகக் கோப்பையில் சுமாராக செயல்பட்ட கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

மறுபுறம் வருங்கால டி20 கேப்டன் என்று கருதப்படும் ஹர்திக் பாண்டியா தலைமையில் பக்கத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கு பயணித்துள்ள இந்தியா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது போலவே சஞ்சு சாம்சன், சுப்மன் கில், இஷான் கிசான் என நிறைய இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளார்கள். குறிப்பாக அறிமுக வாய்ப்பில் சுமாராக செயல்பட்டு வெளியேறிய உம்ரான் மாலிக் போன்ற இளம் வீரர்களுக்கு கூட மீண்டும் வாய்பளிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் இந்தியாவைப் போலவே உலகக்கோப்பையில் செமி ஃபைனலுடன் வெளியேறிய நியூசிலாந்து எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழ்கிறது.

- Advertisement -

மீண்டும் வருண பகவான்:
எனவே சவாலான நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது உண்மையாகவே இளம் இந்திய வீரர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு கிடைத்த நல்ல வாய்ப்பாகும். ஆனால் நவம்பர் 18ஆம் தேதியன்று துவங்கிய இத்தொடரின் முதல் போட்டி கொட்டி தீர்த்த மழையால் ஒரு பந்து கூட வீசாமல் ரத்து செய்யப்பட்டது இருநாட்டு வீரர்களையும் ரசிகர்களையும் ஏமாற்றமடைய வைத்தது. வெலிங்டன் நகரில் நடைபெற்ற அப்போட்டி ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றமடைந்த இருநாட்டு வீரர்களும் அடுத்ததாக மௌன்ட் மௌங்கனி நகரில் இருக்கும் பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2வது போட்டியில் பங்கேற்பதற்காக அங்கே பயணித்து வலை பயிற்சிகளை துவங்கியுள்ளனர்.

ஆனால் இப்போட்டியிலும் விளையாடுவதற்கு வீரர்களை விட மழை மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறது என்பது மீண்டும் ஏமாற்றமான செய்தியாகும். ஏனெனில் இப்போட்டி நடைபெறும் மௌன்ட் மௌங்கனி நகரில் போட்டி நாளான நவம்பர் 20ஆம் தேதியன்று சராசரியாக 80% இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று நியூசிலாந்து வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக போட்டி நடைபெறும் உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணி முதல் 11.30 மணி வரை முறையே 86%, 71%, 66%, 46%, 41% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியும் முழுமையாக நடைபெறுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் நவம்பர் 20ஆம் தேதியன்று பே ஓவல் மைதான பகுதிகளில் குறைந்தது 20 கிலோமீட்டர் வேகத்தில் ஈர காற்று அடிக்கும் என்று தெரிய வருகிறது. இதன் காரணமாக இடையே மழை விட்டாலும் மீண்டும் வருவதற்கு வாய்ப்புள்ளது. அத்துடன் 8.1 மில்லி மீட்டர் என்றளவுக்கு அதிகப்படியான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதால் இடையே மழை ஓய்ந்தாலும் மைதானத்தில் அதிகப்படியான ஈரப்பதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதன் காரணமாக டக்வொர்த் லீவ்ஸ் முறைப்படி ஓவர்களை குறைத்துப் போட்டிகளை நடத்துவதிலும் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் உள்ளூர் நேரப்படி இப்படி இரவு 9 மணிக்கு மேல் மழை பெய்வதற்கான வாய்ப்பு 50 சதவீதத்திற்கும் கீழே குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் குறைந்தபட்சம் இப்போட்டி 5 ஓவராக நடைபெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் முதல் போட்டியே மொத்தமாக கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியும் நடைபெறுவதில் இப்படி சிக்கல் எழுந்துள்ளது இந்திய ரசிகர்களை விட உள்ளூர் நியூசிலாந்து ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement