அந்த சிக்ஸர எப்டி அடிச்சாருன்னு இன்னும் கண்டுபிடிக்க முடியல – விராட் கோலியை வியந்து பாராட்டும் 2 ஆஸி வீரர்கள்

MS Dhoni Virat Kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் தெறிக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. இந்த வெற்றிகளுக்கு இதுவரை 220* ரன்கள் குவித்து இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் ஒட்டுமொத்த வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற ஜெயவர்தனேவின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ள விராட் கோலி முழுமுதற் காரணமாக திகழ்கிறார் என்று வெளிப்படையாக சொல்லலாம்.

அதிலும் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 31/4 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்றதால் கதை முடிந்ததாக கருதப்பட்ட இந்தியாவுக்கு வரலாற்றின் மிகச்சிறந்த டி20 இன்னிங்ஸ் விளையாடிய அவர் 82* (53) ரன்கள் குவித்து அசாத்தியமான வெற்றியை பதிவு செய்தது யாராலும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. சொல்லப்போனால் அந்த இன்னிங்ஸை இன்று மட்டுமல்ல காலத்திற்கும் மறக்க முடியாது என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய தரமான வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ரவூப் வீசிய 19வது ஓவரில் அவர் அடித்த 2 சிக்ஸர்களை எப்போதுமே மறக்க முடியாது.

- Advertisement -

கண்டுபிடிக்க முடியல:
அதிலும் பின்னங்காலில் நின்று நேராக 90 மீட்டர் பறக்க விட்ட சிக்ஸர் வரலாற்றில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் அடித்த மிகச்சிறந்த சிக்ஸர் என்று அனைவரும் பாராட்டினார்கள். குறிப்பாக அந்த சிக்சர் 2003இல் சோயப் அக்தருக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் அடித்ததற்கு சமம் என்று ரவி சாஸ்திரி பாராட்டினார். மேலும் அது 2011 பைனலில் தோனி அடித்த சிக்ஸருக்கு நிகரானது என்று கபில் தேவ் பாராட்டினார். இந்நிலையில் அந்த சிக்சரை எப்படி விராட் கோலி அடித்தார் என்று 2 வாரமாகியும் தம்மால் கணிக்க முடியவில்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் டைலர் வியந்து பேசியுள்ளார்.

ஒருவேளை தாம் அதை அடித்திருந்தால் கேட்ச்சாக மாறியிருக்கும் என்று வியக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டில் பேசியது பின்வருமாறு. “மெல்போர்ன் மைதானத்தில் ஹரிஷ் ரவூப் தலைக்கு மேல் நேராக பின்னங்காலில் நேரான பேட்டை வைத்து அவர் அடித்த சிக்சரை இன்னும் நான் மதிப்பிடுகிறேன். அது 90 மீட்டர்கள் பறந்தது. இப்போதும் அவர் எப்படி அந்த சிக்சரை அடித்தார் என்று என்னால் கணக்கிட முடியவில்லை. ஒருவேளை நான் அதை அடித்திருந்தால் கேட்ச்சாக மாறி யாராவது டைவ் அடித்து பிடித்திருப்பார்கள்” என்று கூறினார்.

- Advertisement -

அதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டை விராட் கோலி விரும்புவதே அதனுடைய ரகசியமென்று அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு முன்னாள் வீரர் இயன் சேப்பல் தெரிவித்தார். இது பற்றி அவர் வியந்து பேசியது பின்வருமாறு. “கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நாங்கள் விராட் கோலியிடம் ஒரு பேட்டி எடுத்தோம். அதில் அவர் எந்த அளவுக்கு கிரிக்கெட்டை புரிந்து வைத்து பேசுகிறார் என்பதை கண்டு வியந்தோம். அப்போது நீங்கள் ஏன் அதிரடி வீரர்கள் அடிப்பது போல் புதுப்புது ஷாட்டுகளை அடிப்பதில்லை என்று அவரிடம் நாங்கள் கேள்வி எழுப்பினோம்”

“அதற்கு அந்த ஷாட்டுகளை என்னுடைய டெஸ்ட் போட்டியில் நான் அனுமதிக்க விரும்பவில்லை என்று விராட் கோலி பதிலளித்தார். அது தான் விராட் கோலியின் அபாரமான குணமாகும். ஏனெனில் சாதாரண ஷாட்டுகளை வைத்தே அவர் சரியான ரன் ரேட்டில் ரன்களை குவிக்கிறார். அவருடைய சில ஷாட்டுகள் மைதானத்திற்கு வெளியே வரலாம். ஆனால் அதற்காக அதை அவர் அதிரடியாக அடித்தார் என்று சொல்ல முடியாது. நீங்கள் (மார்க் டெய்லர்) சொல்வது போல பின்னங்காலில் நேராக காற்றில் அடிக்காத வரை அதுவும் சிறப்பான கிரிக்கெட் ஷாட் தான். ஆனால் அதை அவர் எளிதாக அதுவும் 90 மீட்டர்கள் அடித்தது ஆச்சரியம்” என்று கூறினார்.

Advertisement