இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா பயிற்சியாளர் கம்பீர் அவர்களின் மிகப்பெரிய ஆதரவோடு மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். நிர்வாகமும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பிடித்து வருகிறார். மற்ற வீரர்களை காட்டிலும் இவருக்கு நிர்வாகம் அதிக ஆதரவு வழங்குவதாக ஒரு விமர்சனமும் தொடர்ந்து இருந்து வருகிறது.
தனது காயம் குறித்து அப்டேட் வழங்கிய ஹர்ஷித் ராணா :
மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படும் அவர் ஓரளவுக்கு பேட்டிங் செய்யக் கூடியவர் என்பதனாலே தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன. அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் ஹர்ஷித் ராணாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அந்த வகையில் இந்திய அணியுடன் இணைந்திருந்த அவர் பயிற்சி போட்டியின் போது விளையாடுகையில் முழங்காலில் காயத்தை சந்தித்தார். இதன் காரணமாக அவர் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து கடைசி நேரத்தில் விலக நேர்ந்தது.
அதனை தொடர்ந்து ஹர்ஷித் ராணாவிற்கு பதிலாக அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இந்திய அணிக்குள் கொண்டுவரப்பட்டார். இந்நிலையில் காயம் அடைந்து வெளியேறிய ஹர்ஷித் ராணா தற்போது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த கையோடு தனது காயம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க : என்னோட வாழ்க்கையிலேயே நான் இப்படி பயப்பட்டது இல்ல.. நேபாள் அணி குறித்து – ஜாஸ் பட்லர் பேச்சு
அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : என்னுடைய முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. நான் மீண்டும் குணம் அடைந்து விரும்பும் விடயங்களுக்கு திரும்பி கவனம் செலுத்துவேன் என அவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



