அடிச்சது கிங் கோலி ஆச்சே, உலகில் வேறு யாருமே அதை அடிச்சிருக்க முடியாது – மறக்க முடியாத சிக்ஸர்கள் பற்றி ஹாரீஸ் ரவூப்

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரலாற்றில் 8வது முறையாக நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பையில் ஆரம்ப முதலே எதிர்பாராத திரில்லர் திருப்பங்கள் அரங்கேறி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. அதில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது. இருப்பினும் இந்த தொடரில் முதல் போட்டியிலேயே பரம எதிரியான பாகிஸ்தானை காலத்திற்கும் மறக்க முடியாத அசாத்தியமான வெற்றியை பதிவு செய்து இந்தியா தோற்கடித்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

Virat Kohli Rohit Sharma

- Advertisement -

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா, ராகுல், சூரியகுமார் என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினார். அதனால் 31/4 என தோல்வியின் பிடியில் சிக்கி மூழ்கிய இந்தியாவை பாண்டியாவுடன் 113 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து செங்குத்தாக தூக்கி நிறுத்திய விராட் கோலி 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 82* (53) ரன்கள் விளாசி 4 விக்கெட் வித்தியாசத்தில் அசாத்தியமான வெற்றி பெற்று கொடுத்தார்.

அந்த வெற்றியில் ஹர்திக் பாண்டியா 40 ரன்களும் கடைசியில் அஷ்வின் 1 ரன் எடுத்தது முக்கியமாக பார்க்கப்பட்டாலும் முழு முதல் காரணமாக அமைந்த விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதனால் கடந்த வருடம் துபாயில் தமது தலைமையில் முதல் முறையாக உலகக்கோப்பையில் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தானை இம்முறை சாதாரண வீரராக விஸ்வரூபம் எடுத்து பந்தாடிய விராட் கோலி பழிக்கு பழி தீர்த்துக் கொண்டார்.

MS Dhoni Virat Kohli

அசால்ட் சிக்ஸர்கள்:

அன்றைய நாளில் அவர் விளையாடிய இன்னிங்ஸ் டி20 வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று கிட்டத்தட்ட உலகின் அனைவருமே வியந்து பாராட்டினார்கள். அதை விட 145 – 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய தரமான ஹாரிஸ் ரவூப் வீசிய 19ஆவது ஓவரில் பின்னங்காலில் நின்று நேராக அடித்த சிக்சரை பார்த்து வியந்த அத்தனை பேரும் அதை எப்படி அடித்தார் என்று இப்போதும் பேசி வருகிறார்கள். அத்துடன் டி20 உலக கோப்பை வரலாற்றில் அது மிகச்சிறந்த சிங்கிள் ஷாட் என்று ஐசிசியே மனமுருகி வர்ணித்தது.

- Advertisement -

இந்நிலையில் அந்த சிக்ஸர்களை ஹர்திக் பாண்டியா அல்லது தினேஷ் கார்த்திக் அடித்திருந்தால் தமது மனம் வலித்திருக்கும் என்று தெரிவிக்கும் ஹாரீஸ் ரவூப் மிகச் சிறந்த வீரரான விராட் கோலி அடித்தது தமக்கு மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உலகக்கோப்பையில் விளையாடிய விதமே அவருடைய கிளாஸ் ஆகும். அவர் எந்த மாதிரியான ஷாட்களை அடிப்பார் என்று நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக அந்த சிக்ஸர்களை அவர் அடித்த விதத்தைப் போல் உலகில் வேறு யாரும் என்னுடைய பவுலிங்கில் அப்படி ஒரு ஷாட் அடித்திருக்க முடியாது”

rauf

“ஒருவேளை தினேஷ் கார்த்திக் அல்லது ஹர்திக் பாண்டியா அந்த சிக்ஸர்களை அடித்திருந்தால் நான் வருத்தப்பட்டிருப்பேன். ஆனால் அது விராட் கோலியின் பேட்டில் இருந்து வந்தது. அவரிடம் வித்தியாசமான கிளாஸ் உள்ளது. அந்த நேரத்தில் கடைசி 12 பந்துகளில் இந்தியாவுக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது நான் முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தேன். மேலும் கடைசி ஓவரை வீசப்போகும் நவாஸ் ஸ்பின்னர் என்பதால் அவர் குறைந்தது 4 பவுண்டரிகளை கொடுப்பார் என்பதால் 20 ரன்களையாவது விட்டுவைக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அந்த நிலையில் கடைசி 8 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது”

“அப்போது நான் 3 ஸ்லோ பந்துகளை வீசினேன். ஆனால் விராட் கோலி அதை கச்சிதமாக கணித்து விட்டார். அந்த 4 பந்துகளில் நான் ஒரு பந்தை மட்டுமே வேகமாக வீசினேன்” என்று கூறினார். அதாவது தம்முடைய பவுலிங்கில் உலகில் வேறு எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் அந்த சமயத்தில் அசால்டாக அந்த சிக்ஸர்களை அடித்திருக்க முடியாது என்று தெரிவிக்கும் ஹாரீஸ் ரவூப் “அடிச்சது யாரு, கிங் கோலி ஆச்சே” என்ற வகையில் தமது திறமையும் மிஞ்சிய விராட் கோலியை மனதார பாராட்டியுள்ளார்.

Advertisement