இந்திய அணிக்காக கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வந்தவர் ஹர்பஜன்சிங். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிப்பதற்கு முன்பு வரை இவர் தான் இந்தியாவின் பிரதான சுழற்பந்துவீச்சாளர் ஆவார். அணில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் இருவரும்தான் இந்திய அணியின் சுழற்பந்தில் கோலோச்சி வந்தனர்.

இந்திய அணியை கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கட்டி ஆண்டனர். இந்நிலையில் கிட்டத்தட்ட பத்து வருடம் அணியிலிருந்து நீக்கப்படாமல் தான் விளையாடியதற்கு யார் காரணம் என்று தற்போது பேசியுள்ளார் ஹர்பஜன்சிங். இதுகுறித்து அவர் கூறுகையில்…
இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மிகப்பெரிய பங்கு இருக்கிறது. சூதாட்ட சிக்கலில் இந்திய அணி மாற்றி இருந்தபோது அந்த அணியை மீட்டார். அதேபோல் எனக்கும் நிறைய உதவியிருக்கிறார். நான் அணியில் ஆடும் போது எனக்கு ஆதரவாக என் கண்ணுக்கு முன்னால் பேசிய பலர் எனக்கு எதிராக என் முதுகுக்குப் பின்னால் பேசியுள்ளனர்.

எனக்கு அணியில் உண்மையாகவே எப்போதும் ஆதரவு இருந்ததில்லை. அப்படியான ஒரு சூழ்நிலையில் யாருடைய ஆதரவும் இல்லாத நேரத்தில் சவுரவ் கங்குலி எனக்கு ஆதரவாக இருந்தார். தேர்வுக்குழுவினர் எனக்கு எதிராக இருந்தார்கள். அவர்கள் என்னிடம் பேசியதை எல்லாம் நான் தற்போது வெளியில் கூற முடியாது.
ஆனால், அப்படி ஒரு கஷ்டமான காலத்திலும்கூட கங்குலி எனக்கு ஆதரவாக இருந்தார். கங்குலியை தவிர வேற எந்த ஒரு கேப்டனாக இருந்தாலும் அந்த அளவிற்கு ஆதரவு கிடைத்து இருக்குமா என்பது கேள்விக்குறி தான். அவருக்கு எவ்வளவு செய்தாலும் போதாது என்று தெரிவித்துள்ளார். மேலும் தாங்கள் ஆடியபோது இருந்து அணி மிகவும் வலிமையான அணி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங் இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 413 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.



