தென்ஆப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணிவீரர்கள் திட்டமிட்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஐசிசியின் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை என்று ஹர்பஜன்சிங் தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார்.தற்போது தென்ஆப்பிரிக்க -ஆஸ்திரேலியா அணிகளிடையேயான டெஸ்ட் போட்டிகள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றது.இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது கேப்டவுனில் நடைபெற்று வந்தது.
இந்த போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இரண்டாம் இன்னிங்ஸில் பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட் திட்டமிட்டு அடிக்கடி பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. பின்னர் அவர் ஆட்டத்தின் நடுநடுவே தன் பேன்டிற்குள் இருந்து மஞ்சள் நிறத்தில் ஒரு பொருளை எடுத்து பந்தில் தேய்க்கும் காட்சிகள் கேமராவில் பதிவாகியிருந்தது.
பின்னர் இந்த புகார் நடுவர்களிடம் சென்றது. நடுவர்கள் விசாரித்த போது கேமரூன் பேன்கிராப்ட் முதலில் மறுத்தார். தான் கருப்பு துணி மட்டுமே வைத்திருந்ததாக கூறினார். பின்னர் மாலையில் பேசிய அவர் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். மேலும் அணியிலுள்ள சில மூத்த வீரர்களின் ஆலோசனைப்படியே தான் அப்படி செய்ததாகவும் கூறினார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய செயல் தனக்கும் தெரிந்தே நடந்தது எனவும் இனிமேல் அதுபோல நடக்காது எனவும் கூறினார்.இருப்பினும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்கள் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமரின் கடுமையான நெருக்கடிகளால் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஸ்டீவன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் பதவி விலகினர்.
இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய பின்னர் ஐசிசி ஆஸ்திரேலிய அணி கேப்டனிற்கு 100% அபராதத்தையும் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்தது.பந்தை சேதப்படுத்திய பந்துவீச்சாளரான கேமரூன் பேன்கிராப்ட்க்கு 75% அபராதம் மட்டும் விதித்தது.இதற்கு தான் தற்போது இந்தியஅணியின் சுழற்பந்து வீச்சாளர் தனது கடும் அதிருப்தியை பதிவுசெய்ளொள்ளார்.
wow @ICC wow. Great treatment nd FairPlay. No ban for Bancroft with all the evidences whereas 6 of us were banned for excessive appealing in South Africa 2001 without any evidence and Remember Sydney 2008? Not found guilty and banned for 3 matches.different people different rules
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 25, 2018
ஆஸ்திரேலிய அணிவீரர்களுக்கு எதிரான ஐசிசியின் இந்த தண்டனை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹர்பஜன்சிங் “ஐசிசியின் இந்த செயலானது மிகச்சிறப்பு,எங்களுக்கு ஒரு நியாயம், அவர்களுக்கு ஒரு நியாயமா !! 2001ம் ஆண்டில் இதுபோன்று நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் இந்தியஅணி வீரர்கள் ஆறு பேர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த விவகாரத்திலும் எனக்கு மூன்று போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஆனால் கேமரூன் பேன்கிராப்ட்க்கு தடைவிதிக்கப்படாதது ஏன்” என்று கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.