இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக துவக்க வீரர் பின்ச் 114 ரன்களையும், ஸ்மித் 105 ரன்களும், டேவிட் வார்னர் 69 ரன்களை குவித்தனர், இதன் பின்னர் 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
இந்திய அணி சார்பாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 76 பந்துகளில் 90 ரன்களையும், ஷிகர் தவான் 74 ரன்களும் குவித்தனர். மற்ற யாரும் 30 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஜாம்பா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின்போது வர்ணனை செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் கில்கிறிஸ்ட் இந்திய அணி பவுலிங் செய்து கொண்டிருந்தபோது சைனியை பார்த்து தந்தை இருந்தும் பந்து வீசி வருகிறார் என்று தவறுதலாக கூறிவிட்டார். ஏனெனில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் தந்தையே சமீபத்தில் மரணம் அடைந்தார். ஆனால் அதனை தவறுதலாக சைனியின் தந்தை என்று கில்கிறிஸ்ட் குறிப்பிட்டு இருந்தார்.
Yes, thanks @anshu2912 I realize I was mistaken in my mention. Huge apologies for my error, to both @navdeepsaini96 and Mohammed Siraj. 🙏😌 https://t.co/618EUIEyNU
— Adam Gilchrist (@gilly381) November 27, 2020
பிறகு மேலும் சில ஓவர்கள் கழித்து அவருக்கு உண்மை தெரியவரவே நேரலையில் பகிரங்கமாக இருவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அது மட்டுமின்றி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்திலும் அவர் தவறுதலாக செய்த இந்த பிழைக்காக இருவருக்கும் சேர்த்து ஒரு தகவலை வெளியிட்டு தான் செய்த பெரிய தவறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.