இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடித்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் விளையாடிய நட்சத்திர வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியில் 59 ரன்களையும், இரண்டாவது போட்டியில் 44 ரன்களையும், மூன்றாவது போட்டியில் 78 ரன்களையும் குவித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் முக்கிய வீரராக இருப்பார் : கவுதம் கம்பீர்
ஆனால் இந்த தொடரின் போது நாக்பூர் நகரில் நடைபெற்ற முதல் போட்டிக்கு பின்னர் பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : முதல் போட்டியின் போது தான் பிளேயிங் லெவனில் இல்லை என்றும் விராட் கோலிக்கு காயம் ஏற்படவே தான் அணியில் இடம் கிடைத்ததாகவும் கூறியிருந்தார். அவரது இந்த கருத்து பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் நான்காவது இடத்தில் தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடி ரன்குவித்து வரும் அவரை எவ்வாறு நீக்க முடிவு செய்யலாம் என்றும் ஷ்ரேயாஸ் ஐயரை நிராகரிப்பது தவறும் என்றும் ரசிகர்கள் அவரது இந்த கருத்திற்கு தங்களது பதிலை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்தும் ஷ்ரேயாஸ் ஐயரின் இடம் குறித்தும் பேசியுள்ள இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் கம்பீர் கூறுகையில் : இந்த தொடரின் முதல் போட்டியின் போது நாங்கள் ஜெயிஸ்வாலை விளையாட வைக்க நினைத்ததற்கு காரணம் யாதெனில் ஆஸ்திரேலிய தொடரின் போது அவர் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார். எனவே அவரை ஒருநாள் போட்டியில் சோதிக்க நினைத்து முதல் போட்டியில் விளையாட வைத்தோம்.
ஆனால் அதற்காக ஷ்ரேயாஸ் ஐயரை முற்றிலுமாக நீக்க நாங்கள் விரும்பவில்லை. அதேபோன்று ஜெய்ஸ்வாலை ஒரு இன்னிங்ஸ்ஸை வைத்து மட்டும் மதிப்பிட முடியாது. அவர் ஒரு திறமையான இளம் வீரர். நிச்சயம் அவருக்கு எதிர்காலத்தில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படும். அதே வேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடி வரும் விதத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை அவர் நமது அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார்.
நான்காவது இடத்தில் களமிறங்கி அவர் மிகச்சிறப்பாக விளையாடியிருக்கிறார். இந்த இங்கிலாந்து தொடர் மட்டுமின்றி நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலககோப்பை தொடரிலும் அவர் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை அவரது புள்ளி விவரங்களே அவரது திறமைக்கு அடையாளமாக இருந்து வருகிறது. அதனால் நிச்சயம் ஷ்ரேயாஸ் ஐயரை நாம் குறைத்து மதிப்பிடப் போவதில்லை.
இதையும் படிங்க : விராட் கோலியின் சாதனையையே முறியடித்து கெத்து காட்டிய ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ
எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இந்திய அணியின் முக்கிய வீரராக இடம் பிடிப்பார். மேலும் நான்காவது வீரராக அவரே விளையாடுவார். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரை சில மாற்றங்கள் இருந்து வருகின்றன. அதற்கு காரணம் : வலது கை, இடது கை வீரர்களின் கூட்டணிக்காக மட்டுமே தானே தவிர மற்றபடி எந்த ஒரு வீரரின் இடத்தையும் பறிக்கும் எண்ணம் இல்லை என கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.



