மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. இறுதிவரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் 11 அரை சதங்கள் அடித்த ஜடேஜா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் முக்கியமான நேரத்தில் 31 பந்துகளை சந்தித்து 39 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஒருபுறம் இந்திய அணிக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பிசிசிஐ யின் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது : மற்றுமொரு வெற்றி. வாழ்த்துக்கள். ஒரு அழுத்தம் நிறைந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் நல்ல செயல்திறன். பேட் மூலம் ஜடேஜா முன்னேற்றம் மிகவும் முக்கியமானது என்று கங்குலி ட்வீட் செய்திருந்தார். ஜடேஜா இந்திய அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக ஆடி வருகிறார். அவரது இறுதிநேர ஆட்டம் இந்திய அணிக்கு பலமுறை இந்திய அணிக்கு உதவி இருக்கிறது. அவர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்பது நாம் அறிந்ததே. அவர் அணிக்கு தேவையான நேரத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சையும் இதுவரை வழங்கியுள்ளார்.
Another win @bcci …congratulations..good performances with the bat in a pressure game..jadeja s improvement with the bat so important …
— Sourav Ganguly (@SGanguly99) December 22, 2019
உலக கோப்பை அரையிறுதி போட்டியில் கூட இந்திய அணி வெற்றி வரை அழைத்துச் சென்று இறுதியில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்தாண்டு இந்தியாவின் 28 ஒருநாள் போட்டிகளில் 15 போட்டிகளில் ஜடேஜா விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வாய்ப்பு கிடைக்கும்போது அனைத்திலும் தனது பேட்டிங், பீல்டிங் மற்றும் பந்து வீச்சு என மூன்றிலும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.