IND vs HK : வண்டி ஐபிஎல்ல மட்டுமே ஓடும், கேரியரின் மோசமான சாதனை இன்னிங்ஸ் ஆடிய ராகுலை கலாய்க்கும் ரசிகர்கள்

KL Rahul
- Advertisement -

ஆசிய கோப்பை 2022 தொடரில் ஆகஸ்ட் 31ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 4வது லீக் ஹாங்காங்கை எதிர்கொண்ட இந்தியா சிறப்பாக செயல்பட்டு 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 192/2 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா 21 ரன்களும் கேஎல் ராகுல் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி 1 பவுண்டரி 3 சிக்சருடன் 59* (44) ரன்களும் சூர்யகுமார் யாதவ் மிரட்டலாக பேட்டிங் செய்து 6 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 68* (26) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தனர். அதை துரத்திய ஹாங்காங் அணிக்கு தொடக்க வீரர்கள் முர்த்தசா 9, கேப்டன் நிஜாகத் கான் 10 என சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் மிடில் ஆர்டரில் பாபர் ஹயட் 41 (35) ரன்களும் கிஞ்சிட் ஷா 30 (28) ரன்களும் எடுத்து போராடி ஆட்டமிழந்தனர். இறுதியில் ஜீசன் அலி 26* (17) ரன்களும் மெக்கன்சி 16* (8) ரன்களும் எடுத்து போராடிய போதிலும் 20 ஓவர்களில் 152/5 ரன்கள் மட்டுமே எடுத்த ஹாங்காங் போராடி தோற்றது.

- Advertisement -

சொதப்பிய ராகுல்:
முன்னதாக ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வென்ற இந்தியா இந்த வெற்றியால் குரூப் ஏ பிரிவின் புள்ளி பட்டியலில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு 68 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நேற்றைய போட்டியில் அவர் மட்டும் அதிரடியாக விளையாடாமல் போயிருந்திருந்தால் 20 ஓவர்களில் 152 ரன்கள் வரை எடுத்த ஹாங்காங் இந்தியாவின் வெற்றிக்கு கடுமையான சவாலை கொடுத்திருக்கும்.

அதற்கு தொடக்க வீரராக களமிறங்கி 13 ஓவர்கள் வரை விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் கேஎல் ராகுல் கடைசிவரை அதிரடியை தொடங்காமல் 36 (39) ரன்களை 92.31 என்ற ஸ்டிரைக் ரேட்டில் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடியது 200 ரன்களை தொட முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 2019க்குப்பின் ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் தொடக்க வீரராக நிரந்தர இடத்தை பிடித்துள்ள இவர் இந்திய பேட்டியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார்.

- Advertisement -

கேரியரில் மோசம்:
ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி நிலையான இடத்தைப் பிடித்த இவர் சமீப காலங்களில் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய ரன்களை எடுத்தாலும் அவுட்டாகி விடக்கூடாது என்பதற்காக நிதானமாக விளையாடுகிறார். குறிப்பாக அணிக்கு தோல்வியே கிடைத்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் பெரிய ரன்கள் எடுக்கும் நினைக்கும் அவர் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் சுயநலமாக விளையாடுவதாக சமீப காலங்களில் ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்து வருகிறார்கள்.

குறிப்பாக 50 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தால் பயனில்லை 25 பந்துகளில் 50 ரன்கள் எடுப்பதே வெற்றிக்கு வித்திடும் என்று ஜாம்பவான்கள் கபில் தேவ் விமர்சித்தது அதன் உச்சமாக பார்க்கப்பட்டது. அந்த நிலைமையில் சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் 500, 400 போன்ற பெரிய ரன்களை விளாசி தனது சம்பளத்தை 17 கோடி என்றளவுக்கு உயர்த்தியுள்ள அவர் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் லக்னோவின் கேப்டனாக 400க்கும் மேற்பட்ட ரன்களை அடித்திருந்தார்.

- Advertisement -

அதன்பின் நடைபெற்ற தென்னாப்ரிக்க தொடரில் கடைசி நேரத்தில் காயத்தால் விலகிய அவர் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்காத நிலையில் ஜிம்பாப்வே தொடரில் கடைசி நேரத்தில் தவானை அவமானப்படுத்தும் வகையில் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதில் 1, 30 என சொற்ப ரன்களில் அவுட்டான அவர் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆசிய கோப்பை போட்டியில் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார்.

இந்த வருடம் இந்தியாவுக்காக முதல் முறையாக அந்த டி20 போட்டியில் களமிறங்கி கோல்டன் டக் அவுட்டான அவர் நேற்றைய போட்டியில் தனது கேரியரிலேயே முதல் முறையாக படுமோசமாக 100க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார். அந்த பட்டியல்:
1. 92.30, ஹாங்காங்க்கு எதிராக, 2022*
2. 114.00, நியூசிலாந்துக்கு எதிராக, 2020
3. 117.5), ஜிம்பாப்வேக்கு எதிராக, 2016

அதனால் கேஎல் ராகுல் என்றால் ஐபிஎல் தொடரில் மட்டும்தான் சிறப்பாக விளையாடுவார் இந்தியாவுக்காக தடுமாறுவார் என்று ஏற்கனவே வெளிப்படையாக பேசும் ரசிகர்கள் நேற்றைய போட்டியில் உச்சபட்சமாக மெதுவாக விளையாடிய அவரை விதவிதமாக சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள். அத்துடன் வழக்கமாக ஸ்காட்லாந்து போன்ற கத்துகுட்டிகளை வெளுக்கும் அவர் நேற்று ஹாங்காங்க்கு எதிராக திணறியதால் அடுத்த போட்டியில் நீக்கிவிட்டு தீபக் ஹூடா போன்ற இளம் ஆல் ரவுண்டர் வீரருக்கு வாய்ப்பளிக்குமாறும் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement