கத்தாரில் ஒலிக்கும் சஞ்சு சாம்சன் குரல் – இந்திய அணி நிர்வாகத்துக்கு எதிராக உலக அளவில் போராடும் ரசிகர்கள், முழுவிவரம் இதோ

Sanju Samson
- Advertisement -

நியூசிலாந்து மண்ணில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை மழைக்கு மத்தியில் வென்றாலும் அடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரை அதே மழைக்கு மத்தியில் வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது. முன்னதாக கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடர் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்படுகிறது. ஆனால் இதில் காலம் காலமாக வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் கேரளாவை சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன் மீண்டும் புறக்கணிக்கப்பட்டு வருவது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த 2015இல் அறிமுகமானாலும் 2வது கிரிக்கெட் போட்டியை 2019இல் விளையாடிய அவலத்தை சந்தித்த அவர் 2021 வரை குப்பை போல இந்திய அணியில் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்டு வந்தார்.

இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்திய அவர் இந்த வருடம் ராஜஸ்தானின் கேப்டனாகவும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டதால் ஓரளவு நிலையான வாய்ப்புகளை பெற்றார். அதில் பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டு நல்ல ரன்களை குவித்து நல்ல பார்மில் இருக்கும் அவருக்கு டி20 உலக கோப்பையில் ரிசர்வ் பட்டியலில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் கொந்தளித்த ரசிகர்களின் கோபத்தை தணிக்க அடுத்ததாக நடைபெற்ற நியூசிலாந்து ஏ ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக அவரை அறிவித்து பிசிசிஐ மழுப்பியது.

- Advertisement -

கத்தாரில் ஒலிக்கும் குரல்:
அதில் 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியை பதிவு செய்து சமீபத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் 3 போட்டியிலும் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்தலாக செயல்பட்ட சஞ்சு சாம்சனுக்கு நடைபெற்று வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் வாய்ப்பு பெறவில்லை. அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 190/4 என இந்தியா தடுமாறிய போது ஸ்ரேயாஸ் ஐயருடன் 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 36 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சன் 306 ரன்கள் குவிக்க உதவினார். ஆனாலும் 6வது பவுலர் தேவை என்பதற்காக அடுத்த போட்டியிலேயே மனசாட்சியின்றி இந்திய நிர்வாகம் அவரை அதிரடியாக நீக்கியது.

மறுபுறம் காலம் காலமாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சொதப்பி வரும் ரிஷப் பண்ட் ராஜா வீட்டுப் பிள்ளையை போல் உலக கோப்பையிலும் இந்த நியூசிலாந்து தொடரிலும் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருகிறார். அப்படி சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு எவ்வளவு மறுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு அநீதிக்கு எதிராக ரசிகர்கள் ஒன்று திரண்டு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக இந்த நியூஸிலாந்து டி20 தொடரில் சஞ்சு என்ற பொன்னெழுத்துக்களை கொண்ட பதாகைகளை தாங்கி பிடித்து ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்கள் தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் பிஃபா கால்பந்து உலக கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு மெகா ஆதரவு கொடுத்துள்ளார்கள்.

- Advertisement -

ஆம் கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் நிறைய ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் “கத்தாரில் இருந்து நிறைய அன்பும் ஆதரவும் கொண்ட நாங்கள் சஞ்சு சமசனுக்கு ஆதரவு கொடுக்கிறோம்” என்றும் “எந்த போட்டியாக இருந்தாலும் எந்த அணியாக இருந்தாலும் அல்லது வீரராக இருந்தாலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் சஞ்சு சாம்சன்” என மிகப்பெரிய பதாகைகளில் தங்களது ஆதரவு வசனங்களை கையில் பிடித்து ஆதரவு கொடுத்தார்கள். இதை அவரின் ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உட்பட ஏராளமானவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.

இதனால் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகவும் பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்திற்கு எதிராகவும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். இப்படி உலக அரங்கில் போராடும் அளவுக்கு காரணமாக இருக்கும் பிசிசிஐ இனியாவது ரசிகர்கள் இல்லாமல் நாம் இல்லை என்பதை உணர்ந்து திறமையான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement