ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் டி20 அணியாக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனால் சூப்பர் 12 சுற்றில் தேவையான வெற்றிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக 1 விக்கெட் கூட எடுக்காமல் கொஞ்சமும் போராடாமல் படுதோல்வியை சந்தித்து பரிதாபமாக வெளியேறி ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
இத்தனைக்கும் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த கேஎல் ராகுல் முதல் முகமது ஷமி வரை அத்தனை பேரும் உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்பதுடன் ஏற்கனவே அதிகப்படியான அழுத்தம் வாய்ந்த ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடி நிறைய சாதனைகளை படைத்து தேவைக்கு அதிகமான அனுபவத்தைக் கொண்டுள்ளார்கள். ஆனால் அப்படி சூப்பர் ஸ்டார்களாக ரசிகர்கள் கொண்டாடிய வீரர்கள் தான் இந்த தொடரில் சொதப்பலாக செயல்பட்டு தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார்கள்.
பார்க்க விரும்பல:
குறிப்பாக ஹிட்மேன் என்ற பெயருடன் கேப்டனாக முன்னின்று வழி நடத்த வேண்டிய ரோகித் சர்மா இந்த தொடரில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்து மொத்தமாக சொதப்பினார். அவரை விட கிளாஸ் பேட்ஸ்மேன் ஆஹா ஓஹோ என்று புகழப்படும் கேஎல் ராகுல் கத்துக்குட்டிகளுக்கு எதிராக மட்டும் அடித்து எஞ்சிய போட்டிகளில் இந்தியாவை கைவிட்டார். மேலும் பினிசிங் தினேஷ் கார்த்திக் 37 வயதில் சம்பாதித்த அனுபவத்தை கொஞ்சமும் காட்டாமல் அழுத்தமான போட்டிகளில் சொதப்பியதை போல அஷ்வின், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகிய சீனியர் வீரர்களும் பந்து வீச்சு துறையில் மோசமாக செயல்பட்டனர்.
மொத்தத்தில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், பாண்டியா, அர்ஷிதீப் சிங் ஆகியோரை தவிர்த்து அனைவருமே சுமாராக செயல்பட்டதால் அடுத்த உலகக் கோப்பைக்குள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் சுமாராக செயல்பட்ட சீனியர் வீரர்களை அடுத்த முறை பார்க்க விரும்பவில்லை என்று முன்னாள் வீரர் வீரேந்திர வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
இது பற்றி பிரபல கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் மனநிலை உட்பட எதையும் பேச விரும்பவில்லை. ஆனால் சில முக்கிய மாற்றங்களை பார்க்க விரும்புகிறேன். அதிலும் சில முகங்களை அடுத்த உலகக் கோப்பையில் பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் அது தான் 2007 டி20 உலக கோப்பையில் நடைபெற்றது. அதற்கு முன் அத்தனை வருடங்களாக விளையாடிய ஜாம்பவான்கள் அந்த உலக கோப்பையில் விளையாடவில்லை. ஒரு சில இளைஞர்கள் சென்றார்கள். அவர்களிடம் யாருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்பதாலேயே அப்போது நாங்கள் வென்றோம்”
“அதே போன்ற அணியை அடுத்த டி20 உலக கோப்பையில் நான் வருங்காலத்தில் பார்க்க விரும்புகிறேன். அந்தத் தொடரில் அவர்கள் வெல்லவில்லை என்றாலும் வருங்காலத்திற்கு தேவையான அணி நமக்கு கிடைக்கும். அதற்காக உங்கள் எதிர்காலத்தை பற்றி இப்போதே சிந்திக்க தொடங்கினால் இன்னும் 2 வருடங்களில் உங்களால் ஒரு சிறந்த அணியை உருவாக்க முடியும். எனவே அடுத்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படாத சீனியர் வீரர்களை நான் பார்க்க விரும்பவில்லை. அதற்கான முடிவை தேர்வு குழுவினர் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்”
“ஆனால் அடுத்த உலக கோப்பை வரை அதே தேர்வுக்குழு இருக்குமா? அடுத்த தொடருக்கு முன்பாக புதிய தேர்வுக்குழு, புதிய நிர்வாகம் உருவாகி விடும் என்பதால் அவர்களாவது பழைய அணுகு முறையில் மாற்றம் செய்வார்களா? ஆனால் எது எப்படி நடந்தாலும் பழைய பஞ்சாங்கத்தை போலவே அடுத்த உலகக் கோப்பையில் அதே அணியை பயன்படுத்தி அதே அணுகு முறையுடன் விளையாடினால் இப்போது கிடைத்த முடிவிலும் அப்போதும் எந்த மாற்றமும் இருக்காது” என்று கூறினார்.