இங்கிலாந்து நாட்டில் இந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடருக்குப் பின் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று ஏகப்பட்ட வதந்திகள் பரவி வந்த நிலையில் தோனி இதுவரை தனது ஓய்வு முடிவு குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வமான முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் அடுத்த கிரிக்கெட் தொடர் வங்கதேச அணிக்கு எதிராக அடுத்த மாதம் 3 ஆம் தேதி துவங்கவுள்ளது. இதற்கிடையில் தோனி எதிர்காலம் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் தற்போது தோனி எப்பொழுது இந்திய அணிக்கு திரும்புவார் என்ற தகவல்களையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் அணியுடன் இணையும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜார்கண்ட் மாநில வீரர்களுடன் சேர்ந்து தோனி பயிற்சியை தொடங்க உள்ளதாகவும் மேலும் தற்போது துவங்கவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்றாலும் அதற்கு அடுத்த 2020 ஆம் ஆண்டு துவக்கத்தில் ஜனவரி மாதம் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் நிச்சயம் தோனி பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையில் நடைபெற இருப்பதால் அதற்கு ஆயத்தமாகும் வகையில் அவர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் கண்டிப்பாக பங்கேற்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தோனி ரசிகர்கள் தற்போது திருப்தி அடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.



