
இலங்கை அணியின் இளம் கிரிக்கெட் வீரர் தனஞ்சய மதுரங்க டி சில்வா தந்தை, ரஞ்சன் டி சில்வா நேற்று இலங்கையில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான தனஞ்சய டி சில்வாவின், தந்தை இலங்கை தலைநகரான கொழும்புவில் வசித்துவருகிறார். உள்ளூர் அரசியல் பிரமுகரான இவரை இலங்கை ரத்னமாலா பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நேற்று துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.துப்பாக்கி குண்டுகள் துளைத்து காயமடைந்த அவரை அருகில் உள்ள கலுபோவ்லியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அவருடைய இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்று வருகிறது, இதில் பல்வேறு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நேரில் சென்று அவருக்கு இறுதி மரியாதையை செய்து வருகின்றனர்.தனஞ்சய மதுரங்க டி சில்வா, இலங்கை அணியின் இளம் ஆட்டக்காரராவார். இவர் 2015 ஆம் ஆண்டு இலங்கையின் பன்னாட்டு டி20 அணியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் கலந்து கொண்டு தனது முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.
தற்போது இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாட இன்று மேற்கிந்திய நாட்டிற்கு சுற்று பயணம் செல்லவிருக்கிறது. இந்த போட்டியில் இலங்கை அணியில் விளையாடவிருந்த தனஞ்சய மதுரங்க டி சில்வா தனது தந்தையின் மறைவால் இன்று நடக்கவிருக்கும் போட்டியில் பங்கேற்கப்போவது இல்லை என்று தெரியவந்துள்ளது.