இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது ஹராரே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியானது தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரினை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
இந்த போட்டியில் முதலாவதாக டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணியானது சுப்மன் கில்லின் அசத்தலான சதம் காரணமாக 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெடுகளை இழந்து 289 ரன்கள் குவித்தது. பின்னர் 290 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இறுதி வரை போராடி 49.3 ஓவர்களில் 276 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் காரணமாக 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் போது முதல் பந்தை வீச ஓடி வந்த தீபக் சாகர் பந்து வீசும் முன்னரே ஜிம்பாப்வேயின் துவக்க வீரர் கயா கிரீசை விட்டு வெளியேறியதை கவனித்தார்.
இதன் காரணமாக பந்து வீசுவதை நிறுத்திவிட்டு மான்கட் முறையில் அவரை ரன்அவுட் செய்து விட்டு கிரீசை சுட்டிக்காட்டினார். ஆனாலும் தீபக் சாகர் அம்பயரிடம் அவுட் கேட்கவில்லை. அதேபோன்று இந்திய அணியின் கேப்டன் ராகுலும் நடுவரிடம் அவுட் கேட்கவில்லை இதன் காரணமாக நடுவர்கள் அந்த பந்தினை டெட்பாலாக அறிவித்தனர்.
ஜிம்பாப்வே வீரர் ஆட்டம் இழந்து இருந்தாலும் முதல் பந்து என்பதனால் பெரிய மனதுடன் தீபக் சாகர் அந்த விக்கெட்டினை விட்டுக் கொடுத்துவிட்டு சென்றார். அவரது இந்த செயலை கண்ட ரசிகர்கள் அனைவரும் “Sprit Of Cricket” என்று குறிப்பிட்டு அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : IND vs ZIM : எகிறியடித்த சுப்மன் கில் – சச்சின், ரோஹித்தின் ஆல்-டைம் சாதனைகளை தகர்த்து புதிய சாதனை
ஆனால் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள தவறிய இன்னசென்ட் கயா வெறும் ஒன்பது ரன்களில் ஆட்டம் இழந்து அந்த வாய்ப்பையும் வீணடித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.