
இந்தியாவில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடரானது பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை இன்னும் முடியாத நிலையில் மீண்டும் இந்த ஐ.பி.எல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தும் ஏற்பாடுகளில் தற்போது பிசிசிஐ மும்முரம் காட்டி வருகிறது. அதன்படி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இன்றளவும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் முழுமையாக குறையாததன் காரணமாக இந்த ஆண்டு மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி 31 போட்டிகளை 27 நாட்களில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத சென்னை அணி இந்த ஆண்டு மீண்டும் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருக்கும் ஒரு சிக்கல் குறித்து தற்போது அந்த அணியின் சிஇஓ காசி விசுவநாதன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தற்போது இந்த ஆண்டு சிஎஸ்கே அணி வழக்கம்போல பலமாகவே இருக்கிறது.
ஆனால் இப்போதுள்ள பிரச்சினை யாதெனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச விமானங்கள் வருவதற்கு ஜூலை 21-ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதுதான் எங்களுக்கு மிக முக்கியமான பிரச்சினையாக உள்ளது. ஏனெனில் இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் ஹோட்டல்களை முன்கூட்டியே புக்கிங் செய்ய வேண்டும். அது மட்டுமின்றி வீரர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தயாராக வேண்டும்.
இதற்கெல்லாம் தாமதம் ஏற்படுமாயின் விமான பயணமும், ஹோட்டல் அறை புக் செய்வதும் பெரிய பிரச்சினையாக இருக்கும் எனக் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மற்றபடி இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிஎஸ்கே அணி நிச்சயம் இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் வலிமையுடன் உள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.