டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இவரை விளையாட வைக்க வேண்டும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra
- Advertisement -

ஆடவருக்கான ஏழாவது டி20 உலக கோப்பை தொடரானது ஐக்கிய அமீரகத்தில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்க இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இழந்திருக்கும் இந்திய அணிக்கு, ஐசிசி கோப்பையை கைப்பற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு இதே ஆண்டு அமைந்திருக்கிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக பந்து வீசி வரும் வீரர் ஒருவரை, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட வைக்க வேண்டும் என்று இந்திய ரசிகர் ஒருவர் கூறிய கருத்திற்கு பதிலளித்திருக்கும் ஆகாஷ் சோப்ரா, அந்த குறிப்பிட்ட வீரர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் சிறப்பாக விளையாடினால் போதாது, அடுத்து நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக பந்து வீச வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணிக்கு ஆறுதலாக இருந்த ஒரு விடயம் என்றால் அது முஹம்மது ஷமியின் பந்து வீச்சுதான். நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களுக்கு இணையாக பந்து வீசிய ஒரே இந்திய பவுலரும் அவர்தான். தற்போதைய ஃபார்ம் மட்டுமல்லாமல் டி20 உலக கோப்பை நடக்கவிருக்கும் ஐக்கிய அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் முஹம்மது ஷமி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளார். இந்த இரண்டையும் கருத்தில்கொண்டு டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷமியை விளையாட வைக்கலாமா என்று ரசிகர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறியிருப்பதாவது,

இந்திய டி20 அணியில் ஷமி எப்போதுமே ஒரு முக்கியமான தேர்வாக இருந்ததில்லை. ஏனெனில் அவரைவிட சிறந்த பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்கின்றனர். அவர்கள் தான் எப்பொதுமே முதல் தேர்வாக இருப்பார்கள். பஞ்சாப் அணிக்காக அவர் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் அதற்கடுத்து காயமடைந்த அவர் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசவில்லை. நீங்கள் டி20 அணியில் முஹம்மது ஷமியை தேர்வு செய்ய நினைத்தால், அந்த வாய்ப்பானது அவருக்கு அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது.

shami

ஒருவேளை அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அடுத்து வரும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக பந்து வீசினால் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதில் மேலும் பேசிய அவர் தமிழக வீரரான நடராஜன் உடல் தகுதி அடைந்துவிட்டால் அவருக்கு நிச்சயம் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது,

Shami

ஷமியின் டி20 ரெக்கார்டுகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் மற்றவர்களை விட சிறப்பானதாக இல்லை. ஜாஸ்பிரித் பும்ராவிற்கு எப்போதுமே அணியில் இடம் இருக்கும். புவனேஷ்வர் குமாரும் அப்படிதான். மேலும் காயமடைந்திருக்கும் நடராஜன் உடல் நலம் தேறி வந்துவிட்டால் அவரும் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்பதால் ஷமிக்கான வாய்ப்பு மிக குறைவாகவே இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த தமிழக வீரரான நடராஜன், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது நன்றாக இருக்கிறார். ஆனாலும் இலங்கை தொடர்களுக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement