உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பலியானோர் எண்ணிக்கை 6500 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் வைரசால் இதுவரை ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேநேரம் 76,000 பேர் குணமடைந்து உள்ளார்கள் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ் சீனாவில் ஏகப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தியதுடன் உலக நாடுகள் எங்கும் பரவத் துவங்கியது. சீனாவைத் தொடர்ந்து ஐரோப்பாவில் அந்த வைரஸ் வேகமாக பரவியது.
இத்தாலி நாட்டில் அதிகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சீனாவிற்கு அடுத்து அந்த நாட்டில் அதிக உயிர் பலி வாங்கியுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளிலும் பரவத் தொடங்கிய இந்த வைரசுக்கு எதிராக தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல்வேறு நாடுகளின் அரசுகளும் தகுந்த முறையில் செயல்படுத்தி வருகின்றன.
அதேபோல இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் திரையரங்கம், பள்ளிகள், ஷாப்பிங் மால் என மக்கள் கூடும் இடங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு மக்கள் செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் இதே போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மக்கள் தவிர்ப்பதாக இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் வேதனை தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது : மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அரசாங்கம் கூறியதை சென்னை மக்கள் இன்னும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
Let me rephrase it, social distancing doesn’t seem to have caught the attention of the people in Chennai yet. The only reason could be their belief in the summer to curtail it or just faith that nothing will happen. #Coronaindia
— Ashwin Ravichandran (@ashwinravi99) March 15, 2020
மேலும் சென்னையில் நிலவும் கடுமையான வெப்பநிலையால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் என மக்கள் நினைத்திருக்கலாம். மேலும் அது தங்களை தாக்காது எனவும் அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கலாம் என்று அஷ்வின் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.