ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதையும் சேர்த்து 3 முறை சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற முதல் அணி என்ற உலக சாதனையும் இந்தியா படைத்தது. முன்னதாக பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சினைகளால் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடியது.
அந்த அறிவிப்பை ஐசிசி வெளியிட்ட போது யாருமே விமர்சிக்கவில்லை. ஆனால் குரூப் சுற்றில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்து செமி ஃபைனலுக்கு சென்றதும் துபாயில் இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சாதகம் இருப்பதாக விமர்சனங்கள் வந்தன. குறிப்பாக மைக்கேல் ஆதர்டன், நாசர் ஹுசைன், பட் கமின்ஸ் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் இந்நாள் வீரர்கள் விமர்சித்தார்கள்.
ஐசிசின்னா இந்தியாவா:
இது போக இந்தியாவுக்காக துபாய்க்கும் பாகிஸ்தானுக்கும் அலைந்தது தாங்கள் செமி ஃபைனலில் தோல்வியை சந்திக்க காரணமானதாக தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் விமர்சித்தார். இருப்பினும் அதற்கெல்லாம் கவலைப்படாத இந்திய அணி களத்தில் நன்றாக செயல்பட்டு கோப்பையை வென்றது. இந்நிலையில் ஐசிசி என்றால் இப்போதெல்லாம் இந்தியா என்ற நிலைமை ஆகிவிட்டதாக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் ஆண்டி ராபர்ட்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா செமி ஃபைனலில் விளையாடப்போகும் மைதானத்தை முன்னதாகவே அறிவித்த ஐசிசி வருங்காலங்களில் நோ-பால் இல்லையென்று கூட சொல்லலாம் என்று ராபர்ட்ஸ் சாடியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எதையாவது செய்யலாம். ஆனால் இந்தியா அனைத்தையும் பெற முடியாது”
இந்தியாவுக்காக அநியாயம்:
“ஐசிசி இந்தியாவுக்கு சில நேரங்களில் இல்லை என்று சொல்ல வேண்டும். கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையிலும் தங்களது செமி ஃபைனல் போட்டியை எங்கே விளையாடுவோம் என்று தெரிந்த காரணத்தால் இந்தியா சாதகத்தை பெற்றிருந்தனர். தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் அவர்கள் எங்கேயும் பயணிக்கவில்லை. ஒரு அணியால் எப்படி ஐசிசி தொடரில் பயணிக்காமல் விளையாட முடியும். இது நியாயமற்றது”
இதையும் படிங்க:
“இது கிரிக்கெட் அல்ல. இந்தியாவிலிருந்து நிறைய பணம் வருகிறது என்று எனக்குத் தெரியும். அதற்காக கிரிக்கெட் என்பது ஒரு நாட்டுக்காக விளையாடப்படும் விளையாட்டாக இருக்கக்கூடாது. தற்போது அது ஒரு நாட்டு விளையாட்டு போல தெரிகிறது. களத்தில் அனைத்தும் சமமாக விளையாடப்படவில்லை. என்னைப் பொறுத்த வரை ஐசிசி என்றால் இந்திய கிரிக்கெட் வாரியமாகும். இந்தியா அனைத்தையும் நடத்துகிறது. ஒருவேளை இந்தியா நாளை ஒய்ட், நோ-பால் வேண்டாம் என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது இந்தியாவை திருப்திப்படுத்த அதையும் ஐசிசி செய்யும்” என்று கூறினார்.