
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அப்போட்டியில் 193 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் மட்டுமே 39 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர்த்து மற்ற டாப் ஆடர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் லோயர் ஆர்டரில் ஜடேஜா 61* ரன்கள் எடுத்து போராடியும் இந்தியாவால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
இந்நிலையில் அந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட் ரன் அவுட்டானது இந்தியாவின் தோல்விக்கு முதல் காரணமானதாக முன்னாள் கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறியுள்ளார். ஏனெனில் ராகுலுடன் சேர்ந்து பண்ட் 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் இந்தியா 100 ரன்களை முன்னிலையாகப் பெற பிரகாச வாய்ப்பிருந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் 2வது இன்னிங்ஸில் 4வது நாள் மாலையில் கருண் நாயர் பந்தை தவறாகப் படித்து விக்கெட்டை இழந்தது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதாகவும் ரகானே தெரிவித்துள்ளார்.
அடுத்தப் போட்டியிலாவது இந்திய அணி பேட்டிங் துறையில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஒரு எக்ஸ்ட்ரா பவுலரை விளையாட வைக்க வேண்டும் என்றும் ரஹானே கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பென் ஸ்டோக்ஸ் பந்தை ஒற்றை கையிலெடுத்து அற்புதமாக ரன் அவுட் செய்தார். அந்த ரன் அவுட்டை வைத்து தான் இங்கிலாந்து மீண்டும் கம்பேக் கொடுத்ததாக உணர்ந்தேன்”
“2வது இன்னிங்ஸில் ஒரு கட்டத்தில் இந்தியா 40/1 என்ற நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அப்போது கருண் நாயர் எல்பிடபுள்யூ ஆனது போட்டியை இந்தியாவிடமிருந்து இங்கிலாந்தின் பக்கம் திருப்பியது. சிறப்பாக பவுலிங் செய்த இங்கிலாந்து அணிக்கு அனைத்து ஃபீல்டர்களும் களத்தில் போராட்டக் குணத்தைக் காண்பித்தது அற்புதமானது”
“அப்படி 11 வீரர்களும் ஒன்றாக வந்து போராடி வெற்றி பெறுவதையே நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்க்க விரும்புவீர்கள். அவர்களுடைய அணுகுமுறை மற்றும் கேரக்டரை பார்ப்பது நன்றாக இருந்தது. இந்தியாவும் நன்றாக போராடினார்கள். ஆனால் இங்கிலாந்து கம்பேக் கொடுத்து போட்டியை வென்ற விதத்திற்கு பாராட்டுக்கள். அது ராகுல் – பண்ட் அழகாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய போது இந்தியா வெல்ல வேண்டிய போட்டியாக இருந்தது”
இதையும் படிங்க: இப்படி ஏன் பேசுனோம்னு கண்டிப்பா வாஷிங்டன் சுந்தர் வருத்தப்பட்டிருப்பாரு – ஜாஸ் பட்லர் பேட்டி
“ஆனால் அந்த ரன் அவுட்டால் இந்தியா 75 – 100 ரன்களை குறைவாக எடுத்தது. ஏனெனில் 4, 5வது நாட்களில் பேட்டிங் செய்வது கடினம் என்பது நமக்குத் தெரியும். முதல் இன்னிங்ஸில் நாம் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினோம். முன்னோக்கிச் செல்லும் போது இந்தியா ஒரு எக்ஸ்ட்ரா பவுலரை எடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் 20 விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே உங்களால் வெல்ல முடியும்” என்று கூறினார்.