நீங்க என்னையும் மிஞ்சிட்டிங்க நண்பா – அடக்கமாக பேசிய சூர்யகுமாரை பாராட்டிய ஏபிடி பேசியது என்ன?

AB DE villiers Suryakumar Yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று எதிர்பாராத திருப்பங்களுடன் முடிந்துள்ளது. இந்த தொடரில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள இந்தியா 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக முதல் 4 போட்டிகளிலேயே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்தியா நவம்பர் 6ஆம் தேதியன்று நடைபெற்ற ஜிம்பாபேவுக்கு எதிரான சம்பிரதாய கடைசி போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்தது. புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 186/5 ரன்கள் குவித்து பின்னர் ஜிம்பாப்வேவை 115 ரன்களுக்கு சுருட்டி வென்றது.

அந்த எளிதான வெற்றிக்கு பேட்டிங்கில் ரோகித் சர்மா 15 (13) விராட் கோலி 26 (25) ரிஷப் பண்ட் 3 (5) ஹர்டிக் பாண்டியா 18 (18) என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக 6 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 61* (25) ரன்களை குவித்து கருப்பு குதிரையாக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதிலும் நேற்றைய போட்டியில் கேஎல் ராகுல் 51 (35) ரன்கள் குவித்து ஆட்டமிழந்த பின் மிடில் ஓவர்களில் முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 15 ஓவர்களில் 107/4 என தடுமாறிய இந்தியா 160 ரன்களை தாண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

- Advertisement -

என்னையும் மிஞ்சிட்டீங்க:
ஆனால் நான் இருக்கும் வரை இந்தியாவை கீழே விடமாட்டேன் என்ற வகையில் கடைசி நேரத்தில் சூரியகுமார் அதிரடி காட்டியதால் கடைசி 5 ஓவரில் 69 ரன்கள் குவித்து இந்தியா அசத்தியது. அதை விட கடைசி ஓவரில் 18 ரன்கள் குவித்தது உட்பட 244.00 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் மைதானத்தின் நாலா புறங்களிலும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இப்படி அறிமுகமானது முதலே பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சரவெடியாக செயல்படும் சூப்பர் ஸ்டார் ஸ்டைலை பின்பற்றும் சூரியகுமார் அட்டகாசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முகமது ரிஸ்வானை முந்தி சாதனை படைத்துள்ளார்.

அதை விட மைதானத்தின் நாலாபுறங்களிலும் சுழன்றடிப்பதால் ஏற்கனவே இந்திய ரசிகர்களும் ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்களும் அவரை இந்தியாவின் ஏபிடி என்றும் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றும் போற்றி வருகிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக மீண்டும் ஒருமுறை நேற்றைய போட்டியில் வெளுத்து வாங்கிய அவரை “நீங்கள் ஏபி டி வில்லியர்ஸ் போல மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேனாக செயல்படுகிறீர்கள்” என்று போட்டி முடிந்ததும் முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் பாராட்டினார்.

- Advertisement -

அதற்கு உலகிலேயே ஏபி டீ வில்லியர்ஸ் மட்டுமே 360 வீரர் என்று மறுப்பு தெரிவித்த சூரியகுமார் யாதவ் அடக்கத்துடன் பேசியது பின்வருமாறு.”உலகிலேயே 360 டிகிரியில் விளையாடக்கூடிய ஒரே ஒரு வீரர் மட்டுமே உள்ளார்” என்று கூறினார். அவரது இந்த அடக்கமான பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி ஏபி டீ வில்லியர்ஸ் கவனத்தை நேரடியாக ஈர்த்தது. அதனால் மகிழ்ச்சியடைந்த அவர் நீங்கள் அந்த இடத்திற்கு மிகவும் வேகமாக வந்து கொண்டிருக்கிறீர்கள். சொல்லப்போனால் 360 டிகிரி என்பதையும் தாண்டிய உச்சத்தை நீங்கள் அடையப் போகிறீர்கள் என்று தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

இது பற்றி ஏபி டிவில்லியர்ஸ் ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு. “நீங்கள் அங்கே மிகவும் விரைவாக வருகிறீர்கள் நண்பரே. (சொல்லப்போனால்) இன்னும் அதிகமாக. இன்று மிகச் சிறப்பாக விளையாடினீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். அப்படி இந்திய வீரரை மனதார பாராட்டிய ஏபி டீ வில்லியர்ஸ் கொடுத்த அந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement