
இந்திய கிரிக்கெட் அணியில் சுப்மன் கில்லை வருங்கால சூப்பர் ஸ்டார் என்று சமீப காலங்களில் நிறைய முன்னாள் வீரர்கள் பாராட்டியுள்ளனர். 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் 2019ஆம் ஆண்டு சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்பக் காலங்களில் காயத்தால் நிலையாக விளையாட முடியாத அவர் இந்தியாவின் மறக்க முடியாத 2021 காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து மிகவும் முக்கிய பங்காற்றினார்.
அப்படியே 2022, 2023 வருடங்களில் ஒருநாள், டி20 கிரிக்கெட்டிலும் சதங்களை அடித்த அவர் நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தினார். குறிப்பாக அந்த வருடங்களில் விராட் கோலி போல அடுத்தடுத்து சதங்கள் அடித்ததால் அவரை இந்திய கிரிக்கெட்டின் பிரின்ஸ் என்று ரசிகர்களும் பாராட்டினர். ஆனால் 2023 உலகக் கோப்பையிலிருந்து சுப்மன் கில் கொஞ்சம் தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடத் தடுமாறும் அவர் கடந்த இலங்கை ஒருநாள் தொடரில் சுமாராக விளையாடி 27 வருடங்கள் கழித்து இந்தியா தோற்க முக்கிய காரணமானார். அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து ரன்கள் குவிக்க தடுமாறும் சுப்மன் கில் 2024 தரம்சாலா மற்றும் சென்னை டெஸ்ட் போட்டிகளில் தலா 1 சதம் அடித்தார். அப்படி தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கத் தவறுவதால் இவரா பிரின்ஸ்? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் சுப்மன் கில்லை பிரின்ஸ் என்று சொல்வது மிகவும் சரி என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் புள்ளி விவரங்களுடன் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தசாப்தத்தில் இந்தியாவுக்காக யார் அதிக சதங்கள் அடித்துள்ளார்? என்ற ஒரு ட்விட்டர் பதிவை பார்த்தேன்”
“அதில் இந்த தசாப்தத்தில் (2021 முதல்) சுப்மன் கில் இந்தியாவுக்காக 114 இன்னிங்ஸில் அதிகபட்சமாக 12 சதங்கள் அடித்துள்ளார். அது அற்புதமானது. அதே காலகட்டங்களில் நம்மளுடைய ஜாம்பவான்கள் ரோஹித் சர்மா 148 இன்னிங்ஸில் 10 சதங்களும் விராட் கோலி 149 இன்னிங்ஸில் 10 சதங்களும் அடித்துள்ளனர். எனவே அவருக்கு நாம் பிரின்ஸ் என்ற பட்டத்தை தவறாக கொடுக்கவில்லை”
இதையும் படிங்க: நான் தான் முட்டாள்ன்னு என்னையும் சஹரையும்.. தோனி கெட்ட வார்த்தையில் திட்டிருக்காரு.. மோஹித் சர்மா
“அதை அவர் தனது டிஎன்ஏவில் கொண்டுள்ளார். இந்தப் பையன் மகத்துவத்தை நோக்கி ஓடுகிறார் என்று நான் சொல்வேன். ஏனெனில் உண்மையில் அவர் அதை நம்புகிறார். அவர் விஷயத்தில் மனதை வைத்தால் மகத்துவம் அழைக்கிறது. இது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்ல கதையாக இருக்கும்” என்று கூறினார்.