கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போர்டர் – கவாஸ்கர் தொடரை இந்திய அணியானது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியிருந்தது. அத்தொடரின்போது இந்திய அணியின் பல முன்னனி வீரர்கள் காயமடைந்ததால், அனுபவமில்லாத வீரர்களை கொண்ட இந்திய அணியே வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடியதோடு மட்டுமல்லாமல் அந்த தொடரையும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தொடரை டெஸ்ட் கிரிக்கெட்டின் அலட்டிமேட் தொடராக அறிவித்திருக்கிறது ஐசிசி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட் வராலாற்றில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த டெஸ்ட் தொடரை அறிவிக்கும் முடிவை எடுத்த ஐசிசி, அதற்காக தனது அதிகாரப்பூர்வ சேனலில் கிரிக்கெட் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது.
இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 15 தொடர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாக்குகளை செலுத்தியருந்தனர். இதில் மொத்தம் 70 இலட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த வாக்கெடுப்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய அணிகளுக்கு இடையேயான போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர், அதிகப்படியான வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதனை தனது ட்விட்டர் வலைத்தளத்தில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஐசிசி.
மேலும் இந்த வாக்கெடுப்பில் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கும் அதிகப்படியான வாக்குகளை ரசிகர்கள் செலுத்தியிருக்கின்னர். இந்த இரண்டு டெஸ்ட் தொடர்களை தவிர்த்து, 2005ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரும், 2001ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரும் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றிருக்கிறது.
Ahead of the #WTC21 final, we set out to determine #TheUltimateTestSeries.
After 15 head-to-heads and over seven million votes across our social channels, we have a winner…
The 2020/21 Border-Gavaskar Trophy takes the crown 👑 pic.twitter.com/IvpjCxQ2eJ
— ICC (@ICC) June 8, 2021
இந்த மூன்று தொடர்களும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத தொடர்களாக அமைந்திருந்தாலும், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற தொடர்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிக அளவிலான சுவராஸ்யத்தை ஏற்படுத்தியது எனலாம். அந்த தொடரின் முதல் போட்டியில் 36 ரன்களுக்கே ஆல் அவுட்டான இந்திய அணி, அடுத்து நடைபெற்ற போட்டிகளில் இளம் வீரர்களைக் கொண்டே மிகச் சிறப்பாக விளையாடியது.
குறிப்பாக அத்தொடரின் வெற்றியாளர் யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியான கடைசி டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் கடைசி நாளன்று இலக்கை சேஸ் செய்து அசத்தியது இந்திய அணி. மேலும் 1988ஆம் ஆண்டுக்குப் பிறகு கபா மைதானத்தில் எந்த ஒரு அணியும் ஆஸ்திரேலியாவை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியதில்லை என்ற சாதனையையும் இந்திய இளம் அணி முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.