அப்போவே இந்தியாவுக்கு இப்படி நடக்கும்னு சொன்னே யாரு கேட்டீங்க – வெற்றிக்கு பின் பாக் வீரர் கலாய் பேச்சு

- Advertisement -

செப்டம்பர் 4ஆம் தேதியன்று நடைபெற்ற 2022 ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பரம எதிரியான இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 181/7 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோஹித் சர்மா 28, ராகுல் 28, சூரியகுமர் யாதவ் 13, ரிஷப் பண்ட் 14 உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக கடைசி ஓவர் வரை போராடிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 4 பவுண்டரி 1 சிக்சருடன் 60 (44) ரன்கள் குவித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

அதை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 14, பக்கார் ஜமான் 15 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் பொறுப்புடன் 71 (51) ரன்களும் முகமது நவாஸ் அதிரடியாக 42 (20) ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் குஷ்தில் ஷா 14* (11) ஆசிப் அலி 16 (8) ரன்களும் எடுத்து பினிஷிங் செய்து வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றியால் இதே ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் தோல்வியை பரிசளித்த இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்த பாகிஸ்தான் பழி தீர்த்து சூப்பர் 4 சுற்றை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

- Advertisement -

அப்போவே சொன்னேன்:
மறுபுறம் டாஸ் இழந்து பேட்டிங்கில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட போதிலும் 200 ரன்களை எடுக்க தவறிய இந்தியா பந்துவீச்சிலும் கடைசி நேரத்தில் சொதப்பி பரம எதிரியிடம் தலை குனியும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான எஞ்சிய சூப்பர் 4 போட்டியில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான நிலைமை நடப்பு சாம்பியன் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பையில் சாஹீன் அப்ரிடி இல்லாத நிலைமையில் லீக் சுற்றில் போராடி இந்தியா வென்ற போது சந்தோஷப்பட வேண்டாம் என்று இந்திய ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் எச்சரித்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த தோல்விக்கு சூப்பர் 4 சுற்றில் கருணையே காட்டாமல் இந்தியாவை அடித்து துவைத்து பாகிஸ்தான் பழிதீர்க்கும் என்று ஏற்கனவே தெரிவித்ததாக கூறும் அவர் தற்போது சொன்னது போலவே நடைபெற்றுள்ளதாக மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முதல் போட்டியில் தோல்வியடைந்த பின் என்னுடைய இந்திய நண்பர்களிடம் மிகவும் மகிழ்ச்சியடைய வேண்டாம் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். அத்துடன் பாகிஸ்தான் இதிலிருந்து கொதித்தெழுந்து வலுவான கம்பேக் கொடுக்கும் என்றும் கடந்த வீடியோவில் கூறியிருந்தேன். தோல்வியை தவிர்க்க முதலில் இந்தியா தங்களுடைய 11 பேர் அணியை முடிவெடுக்க வேண்டும். வரும் போட்டிகளில் ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா அல்லது ரவி பிஷ்னோய் ஆகிய குழப்பமான தேர்வுகளில் சரியானவற்றை முடிவை எடுக்க வேண்டும்”

“முதலில் உங்களுடைய 11 பேர் அணியை கண்டறியுங்கள். ஏனெனில் இந்திய அணியில் எப்போதும் அதை தேர்வு செய்வதில் குழப்பம் இருக்கிறது. அது ஏன் என்றும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதே போல் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் அடிக்கவில்லை என்றாலும் எங்களிடம் முஹம்மது ரிஸ்வான் இருக்கிறார். அவர் சிறப்பாக விளையாடியிருந்தாலும் வரும் போட்டிகளில் ஆரம்பத்திலேயே சற்று அதிரடி காட்ட வேண்டும். ஏனெனில் இப்போட்டியில் அரைசதம் கடந்த பின்பு தான் அவர் அதிரடியை தொடக்கினார்”

- Advertisement -

“ஆனால் நல்ல ஸ்டிரைக் ரேட்டை ஆரம்பத்திலிருந்தே கொண்டு வருமாறு அவரை நான் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் நவாஸ் விளையாடிய அந்த இன்னிங்ஸ் இல்லாமல் பாகிஸ்தான் வென்றிருக்க முடியாது. நவாஸ் உங்களுக்கு தலை வணங்குகிறேன். சடாப் கானும் சிறப்பாக செயல்பட்டார். நசீம் ஷா நீங்களும் நன்றாக விளையாடினீர்கள்” என்று இந்திய அணியின் தேர்வை கலாய்த்தும் பாகிஸ்தான் அணியை பாராட்டியும் பேசினார்.

இதையும் படிங்க : IND vs PAK : தோல்வியை அர்ஷிதீப் மீது போடுவது சரியா – ரோஹித்தின் கேப்டன்ஷிப் சொதப்பல்கள் இதோ

இருப்பினும் எஞ்சிய சூப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை தோற்கடிக்க தயாரகியுள்ள இந்தியா பைனலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தானை மீண்டும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று எதிர்கொண்டு ஃபைனலில் வென்று சாம்பியன் பட்டத்துடன் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க போராட உள்ளது.

Advertisement