இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று ஹைதராபாத் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரால் அதிரடியான துவக்கம் கொண்டது. முதல் விக்கெட்க்கு 60 ரன்களை சேர்த்திருந்த போது ரோகித் சர்மா 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அதன்பின்னர் விராட் கோலி 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன்பிறகு சூரியகுமார் யாதவ் 33 ரன்கள், ஹார்திக் பாண்டியா 28 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்கள் என அனைவரும் சிறிய அளவில் பங்களிப்பை அளித்தாலும் ஒருபுறம் நிலைத்து நின்ற சுப்மன் கில் 140 பந்துகளை சந்தித்து இரட்டை சதம் கடந்தார்.
இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம் கடந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதோடு குறைந்த எண்ணிக்கையில் அதாவது 19 இன்னிங்களில் ஆயிரம் ரன்களை தொட்ட வீரராகவும் அவர் சாதனை படைத்தார்.
இந்நிலையில் சுப்மன் கில் இரட்டை சதம் அடிப்பதற்கு ஷர்துல் தாகூர் செய்த தியாகம் தான் காரணமாக அமைந்தது. இந்த விடயமானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. ஏனெனில் ஒரு கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழந்து வெளியேறிய போது ஷர்துல் தாகூர் சுப்மன் கில்லுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது 169 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் ஒரு பந்தினை அடித்து விட்டு வேகமாக எதிர் முனைக்கு ஓடி வந்தார். ஆனால் ஷர்துல் தாகூர் அவரை கவனிக்கவில்லை எனவே ரன் ஓடாமல் இருந்த ஷர்துல் தாகூர் சுப்மன் கில் ஆட்டம் இழந்து விடக்கூடாது என்பதற்காக கிரீஸிலிருந்து வெளியேறி தானாக முன்வந்து தனது விக்கெட்டை விட்டுக் கொடுத்து வெளியேறினார்.
இதையும் படிங்க : ஒரே இரட்டை சதத்தால் சச்சின், விராட், ரோஹித்தை மிஞ்சி – ஒருநாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில் படைத்த 7 சாதனைகளின் பட்டியல்
அவர் கொடுத்த அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சுப்மன் கில் 145 பந்துகளில் 200 ரன்களை கடந்ததோடு இறுதியில் 149 பந்துகளை சந்தித்து 19 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என 208 ரன்கள் குவித்து ஐந்தாவது இந்திய வீரராக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.