- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதுல இந்தியாவுக்கு என்ன சாதகம்? என்னோட ஒரே கவலைக்கு ஐசிசி பொறுப்பு.. இங்கிலாந்துக்கு ரோஹித் பதிலடி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் அரையிறுதி போட்டி ஜூன் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி ஃபைனலுக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்தை இம்முறை இந்தியா தோற்கடித்து வெளியேற்ற வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இதற்கிடையே இப்போட்டி நடைபெறும் கயானா நகரில் மழை பெய்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் காணப்படுகிறது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறுமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

- Advertisement -

ரோஹித் பதிலடி:
முன்னதாக இந்த உலகக் கோப்பையின் முதல் செமி ஃபைனல் ஜூன் 27ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு ட்ரினிடாட் நகரில் நடைபெறுகிறது. எனவே அப்போட்டியில் இந்திய அணி விளையாடினால் அதை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் பெரும்பாலானவர்கள் பார்க்க மாட்டார்கள். அதனால் ஒளிபரப்பு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று கயானாவில் நடைபெறும் இரண்டாவது செமி ஃபைனலில் இந்தியா விளையாடும் என்று ஆரம்பத்திலேயே ஐசிசி அறிவித்தது.

ஆனால் அதன் காரணமாக மற்ற அணிகளை விட செமி ஃபைனல் எங்கே விளையாடப் போகிறோம் என்பது இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டதாக மார்க் பட்சர் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்களும் விஸ்டன் போன்ற ஊடகங்களும் விமர்சித்தனர். இந்நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள ரோஹித் சர்மா மழையை நினைத்து மட்டுமே தாம் கவலைப்படுவதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“மழையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. ஒருவேளை இப்போட்டி தாமதமாக முடிந்தால் நாங்கள் செல்ல வேண்டிய தனி விமானத்தை தவற விடுவோம் என்பதே எனது ஒரே கவலையாகும். இருப்பினும் எங்களை அடுத்த போட்டி மைதானத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியது வெஸ்ட் இண்டீஸ் வாரியம் மற்றும் ஐசிசி’யின் பொறுப்பு”

இதையும் படிங்க: தப்பிய குல்பதினின் ஆஸ்கர் நடிப்பு.. ஆனால் வசமாக சிக்கிய ரசித் கான்.. தண்டனையை அறிவித்த ஐசிசி

“தற்போதைக்கு இப்போட்டியில் எங்களுக்கு சாதகமான முடிவை பெறுவதில் கவனம் செலுத்துகிறோம். கயானாவில் விளையாடுகிறோம் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்ததை நான் சாதகமாக நினைக்கவில்லை. இது போன்ற வெவ்வேறு மைதானங்களில் நிறைய வீரர்கள் விளையாடியுள்ளனர். இங்கிலாந்து வீரர்களும் இங்கே விளையாடியிருப்பார்கள் என்று உறுதியாக சொல்வேன். எனவே இது சாதகம் கிடையாது. வெற்றி பெறுவதற்கு நீங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -