இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 3 வகையான இந்திய அணியின் பேட்டிங் துறையில் முதுகெலும்பாக இருந்து வருகிறார். ஜாம்பவான் சச்சினுக்கு பின் அவரின் இடத்தில் அவரைப் போலவே ஒரு ரன் மெஷினாக உலகின் அனைத்து இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு ஏராளமான ரன்களை குவித்த அவர் இந்தியாவுக்கு பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் தனது 31 வயதிலேயே 70-வது சதத்தை விளாசிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குப் பின் அதிக சதங்கள் அடித்த 3-வது பேட்ஸ்மேனாக ஒரு ஜாம்பவனாக ஏற்கனவே தன்னை நிரூபித்துள்ளார்.
ஆனால் அதன்பின் பேட்டிங்கில் மிகப்பெரிய பள்ளத்தாக்கை போன்ற சரிவை சந்தித்துள்ள அவர் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளை கடந்தும் சதமடிக்க முடியாமல் தவித்து வருகிறார். அதிலும் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றில் முதல் முறையாக 3 முறை கோல்டன் டக் அவுட்டான அவரின் ஆட்டத்திலும் உடலிலும் ஓடி ஓடி ரன்கள் சேர்த்த களைப்பு தெரிந்ததால் உடனடியாக 2 – 3 மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்பும் முடிவை எடுக்குமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.
காரணம் சாஸ்திரி:
ஆனால் விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்த அவர் விமர்சனத்திற்கு பின்வாங்காமல் விளையாடிய போதிலும் எந்த மாற்றமும் முன்னேற்றமும் அடையவில்லை. சில வருடங்களுக்கு முன்பு வரை களமிறங்கினால் சதமடிப்பார் என்று நினைக்கும் அளவுக்கு அற்புதமாக பேட்டிங் செய்து தனக்கென ஒரு தரத்தை உருவாக்கியுள்ள அவர் இந்த மோசமான காலகட்டத்திலும் இடையிடையே அரை சதங்கள் அடித்துள்ளார்.
ஆனாலும் அவர் ஃபார்மை இழந்து விட்டதாக கருதும் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அவர் எப்போது சதம் அடிப்பார் என்ற தலைப்பில் கடந்த 2 வருடங்களாக உலக அளவில் தினம்தோறும் பேசி வருகிறார்கள். இந்நிலையில் விராட் கோலி இப்படி தடுமாறுவதற்கு முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதே காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரசித் லதீப் வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார்.
கடந்த 2014இல் தோனிக்கு பின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி 2017இல் 3 வகையான இந்திய அணியின் கேப்டனாகவும் பொறுப்பேற்றார். ஆனால் 2016இல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவுடன் ஒரு வருட காலத்திற்குள் அவருக்கு மனக்கசப்பும் கருத்து வேறுபாடும் ஏற்பட்டது.
அதனால் விராட் கோலியுடனான உறவு சரிவர அமையவில்லை என்று கூறிய அனில் கும்ப்ளே 2017இல் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா தோற்றபின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். அந்த நிலைமையில் ஏற்கனவே 2014 முதல் 2016 வரை இந்திய அணியின் இயக்குனராக செயல்பட்ட ரவி சாஸ்திரி இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின் ரவி சாஸ்திரி – விராட் கோலி கூட்டணி மனதளவில் ஒன்றிணைந்து இந்தியாவை 2021 டி20 உலகக் கோப்பை வரை வழிநடத்தியது. அவர்களது தலைமையில் உலக கோப்பையை வெல்லவில்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா பல சரித்திர வெற்றிகளையும் பிரம்மாண்ட உச்சத்தையும் எட்டியது.
வெறும் வர்ணனையாளர்:
ஆனால் ரவி சாஸ்திரி என்பவர் அதுவரை எந்தவித அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவம் இல்லாமல் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக மட்டுமே செயல்பட்டார் என்று தெரிவிக்கும் ரசித் லதீப் 2019இல் ரவி சாஸ்திரியின் பதவி காலம் முடிந்த போது அனில் கும்ப்ளேவை நிராகரித்து விட்டு மீண்டும் அவரையே 2 வருடங்களுக்கு பதவி நீட்டிப்பு செய்ததே விராட் கோலியின் சரிவுக்கு காரணம் என்று கூறியுள்ளார். அடுத்த சதத்தை எப்படி அடிக்கலாம் என்ற பயிற்சியை கொடுக்காமல் ஓய்வு பெற்ற பின் 2 – 3 மாதங்கள் ப்ரேக் எடுங்கள் என்று விராட் கோலிக்கு ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கியதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“இவை அனைத்தும் அவரால் தான் நடந்தது. 2019இல் நீங்கள் அனில் கும்ப்ளே போன்ற ஒருவரை நிராகரித்ததால் ரவி சாஸ்திரி வந்தார். அவருக்கு பயிற்சி செய்யும் அங்கீகாரம் இருந்ததா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர் தொலைக்காட்சி ஒளிபரப்பில் வர்ணனையாளராக தான் இருந்தார். பயிற்சியில் அவருக்கு எந்த அனுபவமும் தொழிலும் இல்லை. விராட் கோலியை தவிர சாஸ்திரியை உள்வாங்குவதில் மற்றவர்கள் பங்கு வகித்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அது இப்போது பின்னடைவை ஏற்படுத்துகிறது இல்லையா? அவர் (சாஸ்திரி) பயிற்சியாளராக இல்லாதிருந்திருந்தால் அவர் (விராட்) பார்மை இழந்திருக்க மாட்டார்” என்று கூறினார்.