- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இவரையா கலாய்ச்சோம்.. ரெய்னா, தோனியின் சாதனையை உடைத்த பாண்டியா.. இந்தியாவுக்காக வரலாற்று சாதனை

இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் செமி ஃபைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. ஏனெனில் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இந்தியா நேற்று வங்கதேசத்தை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஹர்திக் பாண்டியா 50, விராட் கோலி 38, ரிஷப் பண்ட் 36 ரன்கள் எடுத்த உதவியுடன் 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதைத்தொடர்ந்து சேசிங் செய்த வங்கதேசம் ஆரம்ப முதலே இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சில் திணறலாக விளையாடி 20 ஓவரில் 146/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சாந்தோ 40 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த வெற்றிக்கு 50 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய பாண்டியா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

அபார சாதனை:
நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக கருதப்படும் அவர் சமீப காலங்களாகவே அடிக்கடி காயத்தை சந்தித்து முழுமையாக விளையாடவில்லை. போதாக்குறைக்கு ஐபிஎல் 2024 டி20 தொடரில் மும்பை தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாகும் அளவுக்கு பாண்டியா சுமாராகவே செயல்பட்டார்.

அதனால் ஏராளமான ரசிகர்கள் அவரை கிண்டலடித்து விமர்சித்தனர். இருப்பினும் இத்தொடரில் ஆரம்பம் முதலே அசத்தி வரும் ஹர்திக் பாண்டியா இப்போட்டியில் 108/4 என இந்தியா தடுமாறிய போது களமிறங்கி 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 50* (27) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 6வது இடத்தில் களமிறங்கி அரை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

- Advertisement -

அத்துடன் 6வது இடத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார். இதற்கு முன் கடந்த 2007 டி20 உலகக் கோப்பையில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் 2012 டி20 உலகக் கோப்பையில் சுரேஷ் ரெய்னாவும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தலா 45 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: அதை செய்யாமயே 197 அடிச்சோம் பாருங்க.. அவர் இந்தியாவுக்கு முக்கியம்.. பழைய பாண்டியா வந்துட்டாரு.. ரோஹித் பேட்டி

இது போக இந்தப் போட்டியையும் சேர்த்து ஹர்திக் பாண்டியா டி20 உலகக் கோப்பையில் 302 ரன்களும் மற்றும் 20 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பையில் 300 ரன்கள் மற்றும் 20 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் யுவராஜ் சிங் போன்ற இந்திய வீரர்கள் கூட இந்த சாதனையை செய்ததில்லை. உலக அளவில் சாகித் அப்ரிடி, ட்வயன் பிராவோ, ஷேன் வாட்சன், ஷாகிப் அல் ஹசன், முகமது நபி ஆகியோர் மட்டுமே செய்துள்ளனர்.

- Advertisement -