இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நீக்கப்பட்டு புதிதாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்த முடிவு பெரும்பாலான இந்திய ரசிகர்களிடம் ஏமாற்றத்தை உண்டாக்கியது. ஏனெனில் ரோஹித் தலைமையில் 2023 உலகக் கோப்பையில் 11 வெற்றிகளைப் பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு சென்று அசத்தியது.
அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பையை அவருடைய தலைமையில் வென்ற இந்தியா 2025 சாம்பியன்ஸ் டிராஃபியையும் வென்று சாதனை படைத்தது. இதற்கிடையே 2024 டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் விராட், ரோஹித் சர்வதேச 20 போட்டிகளில் ஓய்வு பெற்றார்கள். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாற்றமாக விளையாடிய அவர்கள் சமீபத்தில் ஓய்வு பெற்றனர்.
முடிகிறதா விராட், ரோஹித் கேரியர் கதை:
எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடப் போகும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அப்போது 40, 38 வயதில் அவர்களால் நல்ல ஃபார்மில், ஃபிட்டாக அசத்த முடியுமா? என்பது கேள்வியாகும். அதனால் வரும் ஆஸ்திரேலிய தொடருடன் அவர்களை கழற்றி விட்டு சுப்மன் கில் தலைமையிலான இளம் அணியை 2027 உலகக் கோப்பையில் களமிறக்க தேர்வுக்குழு திட்டமிட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
அந்த செய்தி தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதைப் பற்றி தங்களிடம் பேசவில்லை என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
அகர்கர் சூசகம்:
“விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 2027 டி20 உலகக் கோப்பை பற்றி உறுதிமொழி வழங்கவில்லை. 2027 உலகக் கோப்பை தேர்வும் இன்று நடக்கவில்லை. எனவே அது பற்றி நாம் அதிகம் பேசத் தேவையில்லை. இந்த கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களான அவர்கள் இந்தியாவுக்காக நிறைய ரன்கள் அடித்துள்ளனர்”
இதையும் படிங்க: ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து தூக்கி விட்டு.. கில்லை நியமித்தது ஏன்? அகர்கர் விளக்கம்
“தொடர்ந்து விளையாட விளையாடுவதற்கு அவர்கள் வழக்கம் போல ரன்கள் குவிக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அனைத்து வீரர்களும் தயாராக இருக்கும் போது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்” எனக் கூறினார். இதிலிருந்து 2027 உலகக் கோப்பையில் விராட், ரோஹித் விளையாட 90% வாய்ப்பில்லை என்பதையே அகர்கர் சூசகமாக சொல்வதாக தெரிகிறது. அதனால் வரும் ஆஸ்திரேலியா தொடர் உட்பட வருங்காலங்களில் அவர்கள் ஓய்வு பெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



