இலங்கையில் நடந்துவரும் கலவரத்துக்கு, கிரிக்கெட் வீரர் அஷ்வின் வேதனை தெரிவித்துள்ளார்.இலங்கை கண்டி மாநகர் அருகே உள்ள அம்பாரா என்ற பகுதியில், சமீபத்தில் இஸ்லாமியர் கடைகள், வர்த்தக நிறுவனங்களை மர்மக் கும்பல் அடித்து நொறுக்கியதுடன், முற்றிலுமாகச் சேதப்படுத்தியது.
இதற்காகச் சிலரை போலீஸார் கைதுசெய்தனர். புத்த மதத்தினர்தான் இத்தகைய தாக்குதலை நடத்தியுள்ளனர் எனக் குற்றம்சாட்டவே, தற்போது மதரீதியான கலவரத்தை உண்டாக்கியுள்ளது. இதையடுத்து, கண்டி மாநகரில் 10 நாள்களுக்கு அவசரநிலை அமல்படுத்துவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. இருப்பினும், அங்கு தொடர்ந்து கலவரம் ஏற்படும் வகையில் சம்பவங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.
இதற்கிடையே, இலங்கையில் நடைபெற்றுவரும் கலவரத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இலங்கையில் நடக்கும் கலவரங்கள் வேதனை அளிக்கிறது. இலங்கை அழகிய நாடு மட்டுமல்லாமல், அங்கு வசிக்கும் மக்களும் நல்ல உள்ளம் கொண்டவர்கள்.
பல்வேறு நம்பிக்கையுடன் வாழும் அந்த மக்களுக்கிடையில் நிலவும் கருத்து வேறுபாடுகள் விரைவில் முடிவுக்கு வரும். ‘வாழு, வாழ விடு’ என்கிற அடிப்படையில் வேறுபாடுகள் களையப்பட வேண்டும். அங்கு, சீக்கிரம் இயல்புநிலை திரும்ப வேண்டிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
What’s happening in Sri Lanka is really sad, such a lovely country with such lovely people and surely this stand off between people with different beliefs will end soon. Let’s live and let live, important to accept differences and move on. ????praying for normalcy soon enough.
— Ashwin Ravichandran (@ashwinravi99) March 7, 2018